இப்படியுமா மரணம் நிகழும்.. செருப்பால் பறிபோன இளம்பெண் உயிர்.. இதை மட்டும் செய்யாதீங்க மக்களே!
பகோடா: கொலம்பியாவில் உள்ள ஒயிட் வாடா கடற்கரைக்கு அருகே படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்ததில் படகின் என்ஜின் பிளேடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கடலில் மீன் பிடிப்பவர்கள் படகு என்ஜின் இயக்கத்தில் இருக்கும் போது மீன் பிடிப்பதையும், கடலில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
இப்படி இருக்கையில், இந்த அறிவுறுத்தல்களை மீறி இளம்பெண் கடலில் குதித்து உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாப்பயணி
கரீபியன் கடலில் கொலம்பியாவுக்கு சொந்தமான சான் ஆன்டர்சன் தீவு இருக்கிறது. இந்த தீவில் ஆண்டு தோறும் கணிசமான அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில், இப்படி சுற்றுலாப் பயணியாக வந்தவர்தான் நடாலியா ஆண்ட்ரியா எனும் 26 வயது இளம்பெண். தனது நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்துக்கொண்டிருக்கையில், கடந்த 27ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று படகில் 24 சுற்றுலாப் பயணிகள், 2 பணியாளர்கள் இருந்துள்ளனர். படகு கடலில் எங்கும் பயணிக்காமல் வெறுமென நின்றுகொண்டிருந்திருக்கிறது. ஆனால் படகின் என்ஜின் இயக்கத்தில் இருந்திருக்கிறது.

கடலில் குதித்த இளம்பெண்
அப்போது நடாலியா ஆண்ட்ரியா மீன் பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயம் அவருடைய செருப்பு ஒன்று தவறி கடலில் விழுந்திருக்கிறது. அதை எடுக்க திடீரென கடலில் குதித்துள்ளார். கடலில் குதித்த நடாலியாவை 15 நிமிடங்கள் ஆன பின்னரும் காணவில்லை. பின்னர் படகின் பின்புறத்திலிருந்து ரத்தம் வெளியேறியுள்ளது. இதனைக் கண்டு பயந்துபோன படகு ஓட்டுநர்கள் என்ஜினை ஆஃப் செய்தனர். இதனையடுத்து நடாலியாவின் உடல் மேல் வந்திருக்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அலற, பணியாளர்கள் கடலில் குதித்து நடாலியாவை மீட்டு தனி விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழப்பு
ஆனால் நடாலியாவின் கால்களிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்திருக்கிறது. பல முறை ரத்தம் ஏற்றப்பட்டாலும் அவரது உடலில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவரது இதய தமனிகளும் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் மருத்துவர்கள் விடாமல் போராடி வந்தனர். இதற்கிடையில் அவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. முதல் முறை நெஞ்சுவலி ஏற்பட்டபோது மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். ஆனால் இன்று காலை வந்த இரண்டாவது நெஞ்சுவலி காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது, "பொதுவாக படகு என்ஜின் இயக்கத்தில் இருக்கும் போது மீன் பிடிக்கக்கூடாது. அபோல கடலில் குதிக்கவோ அல்லது குளிக்கவோ கூடாது.

இதேபோல
ஏனெனில் படகு என்ஜின் அதிக இழுவிசை திறன் கொண்டதாகும். அதாவது இது தண்ணீரை ஒரு திசையிலிருந்து எதிர் திசைக்கு வேகமாக செலுத்தும். அப்போது நீங்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தால் தூண்டில் அந்த என்ஜினில் சிக்குவதற்கு வாய்ப்பு அதிகம். அதேபோல நீங்கள் குளிக்க நினைத்து குதித்தால் என்ஜின் பெரியதாக இருக்கும்பட்சத்தில் அதனால் நீங்கள் உள்ளிழுக்கப்படுவார்கள். நடாலியா மரணமும் அப்படிதான் ஏற்பட்டிருக்கிறது. அவரது செருப்பை எடுக்க திடீரென கடலில் குதித்துள்ளார். அப்போது என்ஜினின் இழுவிசையால் பாதிக்கப்பட்டு என்ஜின் பிளேடுகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து உயிரிழந்திருக்கிறார். சம்பவம் குறித்து இரண்டுபேரை நாங்கள் கைது செய்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

வலியுறுத்தல்
இவ்வாறு படகு என்ஜினில் மாட்டி பயணிகள் உயிரிழப்பு இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் ஸ்பெயினை சேர்ந்த பெரும்பணக்காரின் மகன் ஒருவர் அவரது 60 அடி உயர கப்பலிலிருந்து கடலில் குதித்ததில் என்ஜினில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எனவே படகிலும், கப்பலிலும் பயணம் செய்பவர்கள் இது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று கடலோர காவல் படையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும் இது போன்ற சில விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications