இந்த கொடுமையை பாருங்க.. 'இர்மா' புயலை துப்பாக்கியால் சுட்டு 'விரட்டிய' அமெரிக்கர்கள்!
வாஷிங்டன்: "யார் இடத்திற்கு வந்து யார் சீன் போடுவது, செஞ்சிருவேன்" என்று இர்மா புயலுக்கு எதிராக துப்பாக்கியை ஏந்தியுள்ளனர் அமெரிக்கர்கள். ஒரே நேரத்தில் நகைப்பையும், வியப்பையும் உருவாக்கும் இந்த நிகழ்வு குறித்த விவரம் இதுதான்.
இர்மா என்ற பெயர் கொண்ட புயல் கரீபியன் தீவுகளை நொறுக்கி தள்ளிவிட்டு நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கால் பதித்தது. இந்திய நேரப்படி நேற்று மாலை, அமெரிக்க நேரப்படி நேற்று காலை அந்த புயல் புளோரிடாவில் தரையை கடந்தது.
இந்த புயலையடுத்து புளோரியா மாகாணத்தில் இருந்து சுமார் 60 லட்சம் மக்கள் கூண்டோடு வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.
கோபமாம்
அமெரிக்காவில் ஒரு புயலுக்கு அஞ்சி இத்தனை லட்சம் பேர் ஒரே நேரத்தில் இடம் பெயர்ந்தது சமீபகாலத்தில் இதுதான் முதல் முறை. இதனால் இர்மா மீது அமெரிக்க மக்களில் ஒரு பிரிவினருக்கு கடும் 'கோபம்'.
பேஜ்புக் பேஜ்
"எங்க நாட்டுக்கு வந்ததும் இல்லாம, எங்களையே வீட்டை விட்டு வெளியே போக வச்சிடுச்சே இந்த புயல்" என்று பொறுமிய அமெரிக்க நெட்டிசன்கள், "Shoot At Hurricane Irma" என்ற பெயரில் பேஸ்புக்கில் ஒரு பேஜ் ஆரம்பித்துவிட்டனர்.
27000 பேர் ரெடி
புயல் வீசும்போது துப்பாக்கியால் காற்றை நோக்கி சுட்டு தள்ள வேண்டும் என்பதுதான் இந்த பேஜ்ஜில் உள்ளோருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். அதிர்ச்சி என்னவென்றால் இதில் 27000 பேர் சைன்-அப் செய்து, தாங்கள் ரெடி என முஷ்டியை முறுக்கியபடி நின்றனர்.
விபரீதம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும், விவரம் அறிந்தவர்களும், இயற்கை வல்லுநர்களும் எச்சரிக்கைவிடுத்தனர். 400 மைல் அகலத்தோடு, மணிக்கு 210 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுக்கு எதிராக துப்பாக்கியால் சுடுவது விபரீதங்களை ஏற்படுத்தும். சில நேரங்களில், குண்டு திரும்பி வந்து சுட்டவரையே கொன்றுவிடும் என வார்னிங் கொடுத்தனர். இருப்பினும் சிலர் 'புயலை சுட்டு விரட்டியதாக' தகவல்கள் வெளியாகியுள்ளது. சிலர் விளையாட்டாக புயலை நோக்கி சுட்டுள்ளனர். தங்கள் கோபத்தை தீர்க்க சுட்டவர்களும் உள்ளனர். நல்லவேளையாக சுட்டவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.