பாகிஸ்தானில் சுஃபி புனித தலம் அருகே 6 பேர் கழுத்து அறுத்து கொலை
கராச்சி: பாகிஸ்தானின் பெரிய நகரான கராச்சியில் உள்ள புனித தலம் அருகே 6 ஆண்கள் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடந்தனர்.
பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரான கராச்சியில் அயூப் ஷா புகாரி என்ற சுஃபி முஸ்லிம்களின் புனித தலம் உள்ளது. அந்த தலத்திற்கு அருகே 6 ஆண்கள் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுக் கிடந்தனர். அவர்களின் உடல்களுக்கு அருகே ரத்தக்கறை படிந்த கத்தியும், புனித தலங்களுக்கு செல்வதை நிறுத்துங்கள்- இப்படிக்கு பாகிஸ்தான் தாலிபான்கள் என்று எழுதப்பட்ட பேப்பரும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்தவர்களில் 3 பேர் அந்த தலத்தில் வேலை செய்து வந்தவர்கள். மேலும் 3 பேர் அந்த புனித தலத்திற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள். இது போன்ற புனித தலங்களில் வழிபடுவது பெரும்பாவம் என்று தாலிபான்கள் கூறி வருகின்றனர். இதனால் அண்மை காலமாக சுஃபி முஸ்லிம்களுக்கு எதிராக தாலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேரா காசி கான் நகரில் உள்ள புனித தலத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications