சிகாகோ கடற்கரையில்.. காற்றைக் கிழித்து பறந்த விமானங்கள்.. மெய் சிலிர்க்கும் "ஏர் அண்ட் வாட்டர் ஷோ"
- Ink Pena சஹாயா
சிகாகோ:
வானத்தில் ஒரு விமானம் பறந்து போனாலே குழந்தைகள் அண்ணாந்து பார்த்து குதூகலிக்கும். குழந்தைகள் மட்டுமா, பெரியவர்களும் கூட ஒரு குழந்தையென ஆர்வத்துடன் நிமிர்ந்து பார்த்து வாய் பிளந்து குதூகலிப்போம். ஒரு விமானம் பார்க்கவே அவ்வளவு குதூகலம் என்றால் பல விமானங்கள் ஒரே நேரத்தில் நம் கண்களுக்குள் கிச்சு கிச்சு காட்டினால் எப்படி இருக்கும்.
ஆஹா அந்த விமானங்களை சும்மாவா இயக்குகிறார்கள். என்ன என்ன சாகசம் எல்லாமோ செய்து அதை பார்க்கும் நம் கண்களை கிறங்கடிக்கும் சாகசங்களை வானில் அற்புதமாய் அரங்கேற்றும் திருவிழா கொண்டாட்டங்கள் தான் வானில் அரங்கேறும் ஏர் ஷோ காட்சிகள். அப்படிப்பட்ட ஒரு ஏர் ஷோ தான் அண்மையில் சிகாகோ நகரில் நடந்தது.
அதில் உள்ள சுவாரஸ்யமான காட்சிகள் விடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் நம் முன் கண் விரிந்து வருகிறது உங்களுக்காக. கூடவே என் அனுபவங்களோடு .
கூட்டமோ கூட்டம்
ஏர் ஷோ என்றால் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் சிறார் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏர் ஷோ என்றால் மிகவும் பிடித்த விஷயம் தானே. சர் சர் என்ற விமானங்களின் சத்தமும் கூடவே அவை செய்யும் சாகசங்களுக்காக பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடல் அலைகளோடு
இந்த ஏர் ஷோவின் முக்கியமான சிறப்பே அது நடந்த இடம் தான். வழக்கமாக திறந்த வெளியில் இருந்து பார்வையாளர்கள் பார்க்காமல் இந்த ஏர் ஷோ சிகாகோ நகரின் நார்த் அவனியூ பீச்சில் கடற்கரை மணலில் அமர்ந்து பார்க்கும்படி இருந்தமையால் மக்கள் அனைவருக்கும் மனதுக்கு மிக ரசனையாக இருந்தது. வெயில் ஒரு குளிர்ச்சியென கடல் மணலில் மக்கள் குவிந்திருந்தனர்.
குடும்பம் குடும்பமாக
ஏர் ஷோ நடந்தபோது அங்கங்கே அமைக்கப்பட்ட கூடாரங்களில் அமர்ந்து மக்கள் ஒய்யாரமாக படுத்துக்கொண்டும் சிலர் போர்வைகள் விரித்து குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து கொண்டு ஒரு திருவிழாவை போல கொண்டாடி மகிழ்ந்தனர். வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை கொஞ்ச பேர் கொறித்துக் கொண்டிருக்க இன்னும் கொஞ்ச பேர் அங்கே போடப்பட்ட கடைகளிலிலிருந்து சிக்கன் பிரைஸ், உருளைக்கிழங்கு பிரைஸ் என்று வாங்கி கொறித்துக் கொண்டே பார்த்தனர். இன்னும் ஒரு கூட்டம் கரையில் இருந்து எல்லாம் பார்க்க முடியாதுப்பா என்று கடலில் இறங்கி குளித்து, நீச்சலடித்து கொண்டாடி குதூகலித்துக் கொண்டே ஏர் ஷோவையும் பார்த்து ஏர் ஷோ அண்ட் வாட்டர் ஷோ என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.
வானிலே ஆடுதே ஓடுதே
தண்டர் போர்ட்ஸ் நிறுவனம் நடத்தும் 60வது ஆண்டு விழா என்பதால் இந்த ஆண்டு வெகு சிறப்பாகவே நடந்தேறியது. வானில் வௌவாலைப் போல தலை கீழாக தொங்கிய விமானங்களும், சறுக்கு போல விமானங்களை சர சரவென கீழே ஓட்டி பின் மின்னலென மேல் நோக்கி சீறிய விமானங்களை இயக்கிய விமானிகள் நிஜமான சாகசக்காரர்களே. பாராசூட்டில் தொங்கிய சாகசக்காரர்கள், கீறீச்சிட்டு காதைக் கிழித்த வெகு வேக விமானங்களின் சத்தம் என எல்லாமே பார்வையாளர்களை வெகுவாக குஷிப்படுத்தியது .
வானில் வண்ணக் கோலம்
தரையில் நாம் போடும் அதிகாலை கோலம் போல அந்த வானில் விமானிகள் விட்டு விட்டு வட்டமடித்து வட்டம் என்றும் சதுரம் என்றும் பல வடிவங்கள் போட்டு காண்பித்தாலும் இறுதியில் இட்ட இதய வடிவம் எல்லோர் இதயத்தையும் நிஜமாக தொட்டது. வானில் பல வண்ண ஓவியங்கள் தீட்டிய விமானங்கள் வண்ண தூரிகை ஆனது. அமெரிக்க ராணுவம் நிகழ்த்திய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பெரு விருந்தே. காலை 10 மணிக்கு ஆரம்பித்த கொண்டாட்டம் இனிதே மதியம் மூன்று மணிக்கு முடிந்ததது .
நம்ம ஊர் ஞாபகம் வந்திருச்சுங்கோ!
நம்ம ஊர் போல பலூன் கடைகள், ஐஸ் கிரீம் வண்டியின் டிங் டிங் மணி சத்தமும், குழந்தைகளின் மணல் வீடும் நம்ம ஊரின் நினைவுகளை கிளப்பி விட நம்ம கன்னியாகுமரி கடலில் கால் நனைத்த உணர்வுடன் அப்படியே உற்சாகமாக கடற்கரையில் கால் நனைத்து நனைத்து ஆசை தீராமல் மீண்டும் நனைத்து ஒரு குழந்தையென மாறி எட்டி எட்டி விமானம் பார்த்து சிரித்து சிரித்து சிறு குழந்தென ஆகி வீடு திரும்பினோம்.
சிகாகோ ஏர்ஷோ.. ரொம்ப சியர்ஸுங்கோ!