ஆளில்லா வேவு விமான விவகாரம்.... இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிய பாக்.
இஸ்லாமாபாத்: இந்திய ஆளில்லா வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக இந்திய தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தங்களது எல்லைக்குள் நுழைந்த இந்திய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் நேற்று அறிவித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரத்தின் பிம்பர் பகுதியில் இந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து படம்பிடித்ததால் சுட்டு வீழ்த்தினோம் என்று பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய தூதரிடம் ஆளில்லா வேவு விமானம் தங்களது நாட்டு எல்லைக்குள் நுழைந்தது குறித்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்க இருக்கிறது.
அண்மையில்தான் இந்தியா- பாகிஸ்தான் பிரதமர்கள் ரஷ்யாவின் உஃபா நகரில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் இந்த சம்பவங்கள் இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.