இரவில் குலுங்கிய இந்தோனேசியா.. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்
ஜகர்தா: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா பூமியின் டெக்டோனிக் தட்டுகள் நகர்வு அதிகம்கொண்ட இடத்தில் அமைந்துள்ளது. இதனால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தீவு நாடான இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அந்த நாட்டின் சுமத்ரா தீவில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பேரழிவை இந்த சுனாமி ஏற்படுத்தியது. வடக்கு சுமத்ரா கடலுக்குள் ஏற்பட்ட மிகப் பெரும் நிலநடுக்கம் அதாவது ரிக்டர் அளவில் 9.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மிக பயங்கரமான சுனாமி பேரலைகளை உருவாக்கியது.
இந்தோனேசியா தொடங்கி இந்தியா வரை மிகப் பெரும் பேரழிவுக்குள்ளாக்கியது இந்த 2004 சுனாமி. இந்த சுனாமி பேரழிவால் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் நிலைமையே என்ன என தெரியாமல் கடலோடு கடலாக கரைந்து போயினர்.
இந்த பேரழிவுக்கு பிறகு இந்தோனேசியாவில் நிலநடுக்கம் என்றாலே ஒரு வித அச்சம் தெற்காசிய நாடுகளில் ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில், இந்தோனேசியாவில் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. இந்தோனேசியாவின் வடக்கு பபுவா மாகாணத்தில் உள்ள ஜெயபுரா நகரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின.
இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பின் அதிர்வுகள் ஏற்படும் என்றும் எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications