யு.எஸ்.: மதத்தின் அடிப்படையில் வேலை மறுக்கப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள ஆம்பர்குரோம்பி மற்றும் ஃபிட்ச் துணிக் கடையில் மதத்தின் அடிப்படையில் வேலை மறுக்கப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தைச் சேர்ந்தவர் சமந்தா இலாப்(24). அவர் தனது 17வது வயதில் ஓக்லஹாமா மாநிலத்தின் துல்சா நகரில் இருக்கும் ஆபர்குரோம்பி மற்றும் ஃபிட்ச் துணிக் கடையில் சேல்ஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் முஸ்லீம் பெண்ணான அவர் தனது மதத்தை குறிக்கும் வகையில் தலையில் கருப்பு நிற ஸ்கார்ப் அணிந்திருந்ததால் அவருக்கு வேலை மறுக்கப்பட்டது.
இதையடுத்து சமந்தா இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இத்தனை ஆண்டுகளாக நடந்து வழக்கில் உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. எந்த ஒரு நபருக்கும் மதத்தின் அடிப்படையில் வேலை மறுக்கப்படக்கூடாது. மதத்தின் பெயரால் மக்களை பிரித்துப் பார்ப்பவது சரி அல்ல என்று நீதிமன்றம் சமந்தாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் தங்களின் மத நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை வேலைக்காக மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்பதையே இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் மதத்தின் அடிப்படையில் சமந்தாவுக்கு வேலை அளிக்க மறுத்தது குறித்து விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.