சிட்னி: பிணையாளியாக சிக்கிய இந்தியர் ஆந்திராவின் விஷ்வகாந்த் ரெட்டி -இன்போசிஸ் என்ஜீனியர்!
சிட்னி: சிட்னி ஹோட்டல் முற்றுகையில் சிக்கியுள்ள பிணையாளிகளில் ஒருவராக இடம் பெற்றுள்ள இந்தியர், ஆந்திராவைச் சேர்ந்த விஷ்வகாந்த் ரெட்டி என்று தெரிய வந்துள்ளது. இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றுகிறார்.
முன்னதாக இந்தியர் ஒருவர் சிக்கியுள்ளதை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த சாப்ட்வேர் என்ஜீனியர் யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
கடந்த பல மணி நேரமாக நீடித்து வரும் சிட்னி, காபி ஹோட்டல் முற்றுகையில் இதுவரை 5 பேர் தப்பி வந்துள்ளனர். ஆனால் பலர் உள்ளே சிக்கியுள்ளனர்.
உள்ளே இருப்பவர்கள் யார் யார் என்ற விவரம் முழுமையாகத் தெரியவில்லை. இந்த நிலையில் பிணையாளிகளில் இந்தியாவினைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவன ஊழியரும் சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிணையக் கைதியாக சிக்கியுள்ள இந்தியர் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆந்திராவைச் சேர்ந்த விஷ்வகாந்த் ரெட்டி என்பது தெரியவந்துள்ளது. தங்களுடைய ஊழியர் தீவிரவாதியின் பிடியில் சிக்கியுள்ளதை இன்போசிஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.