சிரியாவில் வெடித்த உள்நாட்டு போர்.. மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்! அதிபரை காப்பாற்றுவாரா புதின்?
டமாஸ்கஸ்: சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தி அரசுக்கு போரிட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு அலெப்போ நகரை கைப்பற்றி உள்ளனர். இதனால் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தை மீண்டும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் காப்பாற்றுவாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிரியா.. உள்நாட்டுக்கு போருக்கு பெயர் பெற்ற நாடுகளில் ஒன்றாகும். சிரியா அதிபராக பஷர் அல் அசாத் உள்ளார். இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிபராக உள்ளார். இந்த நாட்டை எடுத்து கொண்டால் அடிக்கடி உள்நாட்டு போர் என்பது வெடிக்கும்.

அந்த வகையில், கடந்த 2011ல் சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்தது. அதாவது வேலைவாய்ப்பு பிரச்சனை உள்பட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன போராட்டங்கள் நடத்தினர்.
இது உள்நாட்டு போராக வெடித்தது. அதிபர் பஷர் அல் அசாத் மற்றும் அவருக்கு எதிரானவர்கள் என்று இருபிரிவாக பிரிந்து மோதிக்கொண்டனர். இதில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இதில் அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தலையீடு செய்தனர். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் உதவியால் பஷர் அல் அசாத் ஆட்சி தப்பியது. ரஷ்யாவின் வான்படை தாக்குதலில் ஏராளமானவ போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன்மூலம் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டனர். அதோடு போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் 2012ம் ஆண்டில் முதல் இருந்த கிழக்கு அலெப்போ நகர் ரஷ்யாவின் விமானப்படை மூலம் 20216ல் கைப்பற்றி அதிபர் பஷர் அல் அசாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பிறகு அவ்வப்போது அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வந்தன. இதற்கிடையே தான் தற்போது போராட்டங்கள் தீவிரமாகி உள்நாட்டு போர் வெடித்துள்ளது. இதற்கு அலெப்போ நகரை ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் நுழைந்து அதிபர் பஷர் அல்-அசாத்துக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் யார் என்றால் பயங்கரவாத அமைப்பனா அல் குவைதாவுடன் சேர்ந்து செயல்பட்டு வந்தது. அதன்பிறகு அல் குவைதாவுடனான உறவை துண்டித்தது.
இருப்பினும் கூட அல் குவைதா அமைப்பின் இன்னொரு வடிவமாக தான் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். அமெரிக்கா மற்றும் ஐநா சபை இந்த அமைப்பை பயங்கரவாத குழுவாக தான் அறிவித்துள்ளது. இந்த குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் அதிபர் பஷர் அல் அசாத் ஆகியோரின் ஆதரவு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இது தற்போது பஷர் அல் அசாத்துக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.
இதனால் கடந்த காலத்தை போல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு உதவுவாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை சிரியா அதிபர் பஷர் அல் அசாத் யாரிடமும் உதவி கேட்கவில்லை. அவர் உதவி கேட்கும்பட்சத்தில் வெளிநாடுகள் தலையிட்டால் இந்த உள்நாட்டு போர் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த அலெப்போ நகர் ஒருகாலத்தில் மிகப்பெரிய வணிக நகராக இருந்தது. இது சிரியா தலைநகர் டமாஸ்கஸில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ளது. 2011 உள்நாட்டு போருக்கு பிறகு அங்கு மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் இருந்தனர். அதாவது 23 லட்சம் மக்கள் அந்த நகரில் வசித்தனர். சிரியாவின் முக்கிய நகராக இருந்த அலெப்போ உள்நாட்டு போரால் பெரும் சேதத்தை சந்தித்தது. ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்.
உயிருக்கு பயந்து அங்கிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறினர். பலரும் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். கடந்த 2016ல் ரஷ்யா உதவியுடன் அந்த நகரை அரசு கைப்பற்றிய பிறகு அமைதி நிலவி வந்தது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அங்கு உள்நாட்டு போர் வெடித்துள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல் உள்ளது. இதற்கிடையே தற்போது சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கி இருப்பது அந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications