"ரஷ்யாவுக்கு எங்கள் முழு சப்போர்ட்.. வரலாற்று பிழை சரி செய்யப்படுகிறது.." சிரியா அதிபர் சர்ச்சை! ஏன்
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிரியா அதிபர் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா அதிகப்படியான ராணுவத்தைக் குவித்து வந்தது. இந்தச் சூழலில் கடந்த வியாழக்கிழமை முழு வீச்சில் ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார்.
இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை தொடங்கிய போர், தொடர்ச்சியாக 3ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
உக்ரைன் போர்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள்
சீனா ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் கூட அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே குறிப்பிட்டது. இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காமல் சீனா புறக்கணித்தே இருந்தது. இந்தச் சூழலில், ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு சிரியா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. புதினின் ராணுவ நடவடிக்கையைப் பாராட்டிய சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், வரலாற்றின் மாபெரும் பிழை சரி செய்யப்படுவதாகச் சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சிரியா ஆதரவு
ரஷ்ய அதிபர் புதின் நேற்றைய தினம் சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்துடன் தொலைப்பேசி வழியாகப் பேசினார். அப்போது சிரிய அதிபர் அல்-அசாத், "சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்த சமயத்தில் ஏற்பட்ட பிழை இப்போது சரி செய்யப்படுகிறது. சமநிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கை தான் உக்ரைன் மீதான இந்த நடவடிக்கை ரஷ்யாவின் நிலைப்பாடு சரியானது அதற்கு சிரியா ஆதரவு தருகிறது.. நேட்டோ விரிவாக்கத்தை எதிர்கொள்வது ரஷ்யாவின் உரிமை அதற்காக அவர்களுடன் துணை நிற்போம்" என்று தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்
ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே சிரியா எடுக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். ஏனென்றால், கடந்த 2015இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட்ட சமயத்தில் சிரிய அதிபர் அல்-அசாத்திற்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிப் பிரிவுகள் கிளம்பின. அப்போது சிரிய அரசுக்கு ஆதரவாக அங்குக் களமிறங்கிய ரஷ்ய ராணுவம், கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அங்குத் திருப்புமுனையாக இருந்தது. சிரிய அரசையும் காப்பாற்றியது. சிரியாவில் சுமார் 63,000க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் சிரியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
மேற்குலக நாடுகள்
ரஷ்யாவின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே சிரியா இப்போது புதின் ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது. சிரிய அதிபர் அல்-அசாத் , "உலகெங்கும் நடக்கும் குழப்பம் மற்றும் ரத்தக்களரிகளுக்கு மேற்கத்திய நாடுகள் பொறுப்பேற்க வேண்டும். சிரிய பயங்கரவாதிகளுக்கும் உக்ரைனில் உள்ள நாஜிக்களுக்கும் ஆதரவளிக்க மேற்குல நாடுகள் மோசமான வழிகளைப் பின்பற்றுகின்றனர். இதை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.