"வாய்ப்பே இல்லை.. முடிந்ததை பாருங்க!" ஆவேசமாக பேசிய ஜி ஜின்பிங்கிற்கு.. தைவான் கொடுத்த சுளீர் பதிலடி
பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் தைவான் குறித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்குத் தைவானும் இப்போது பதிலடி கொடுத்து உள்ளது.
சீனாவில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார்.
இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசிய அவர், தைவான் விவகாரம் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இதற்குத் தைவானும் இப்போது பதிலடி கொடுத்து உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பொங்கி எழும் மக்கள்.. கிளம்பிய போராட்டம்! கவனிக்கும் உலக நாடுகள்
தைவான்
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே தைவான் மற்றும் சீனாவுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அப்போது தான் அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றார். அவர் அங்கே இருக்கும் போதே, தைவான் அருகே சீனா போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டது. அதன் பின்னரும் கூட ராணுவ நடவடிக்கைகள் அங்குத் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.
ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது உரையில், "தைவான் மக்களைச் சீனா எப்போதுமே மதித்து, கவனித்துக் கொண்டு வருகிறது. தைவான் பிரச்சினையைத் தீர்ப்பது சீன மக்களின் பொறுப்பு. அமைதியான முறையில் மீண்டும் தைவான் எங்களுடன் இணைய நடவடிக்கை எடுக்கிறோம். அதேநேரம் தைவான் மீது ராணுவத்தைப் பயன்படுத்தும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். நிச்சயம் ஒரு நாள் தைவான் சீனாவுடன் முழுமையாக இணைக்கப்படும்" என்று கூறி இருந்தார்.
பதிலடி
இதற்குத் தைவான் ஆவேசமாகப் பதிலடி கொடுத்து உள்ளது. ஒரு போதும் தங்கள் இறையாண்மையில் பின்வாங்க மாட்டோம் என்றும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் செய்ய மாட்டோம் என்று தைவான் தெரிவித்து உள்ளது. தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தைவானின் நிலைப்பாடு உறுதியானது.. தேசிய இறையாண்மையில் ஒருபோதும் பின்வாங்கப் போவது இல்லை. ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் சமரசம் இல்லை. இது தைவான் மக்களின் ஒருமித்த கருத்து.
தீர்க்க வேண்டும்
சீன காங்கிரஸ் மாநாட்டில் நடக்கும் விஷயங்களைத் தேசியப் பாதுகாப்புக் குழு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. பல சர்வதேச விவகாரங்களில் சீனாவின் கொள்கை பெரியளவில் மாறியுள்ளது. இருப்பினும், தைவான் விவகாரத்தில் அது சரியான திசையில் செல்லவில்லை. சீனா தனது ஆக்கிரமிப்பு அரசியலைக் கைவிட வேண்டும், வேறுபாடுகளை அமைதியாகவும் நடைமுறை ரீதியாகவும் தீர்க்க வேண்டும். பரஸ்பர மரியாதையுடன் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.
போராட்டம்
முன்னதாக கடந்த வாரம் பேசிய தைவான் அதிபர் சாய் இங்-வென், "தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்படுவதை விரும்பவில்லை. தைவான் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேநேரம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். சீனாவிலேயே இப்போது மக்கள் அதிபருக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அதை முதலில் சீனா கவனித்தால் சரியாக இருக்கும்" என்றார்.
சீனா நிலைப்பாடு
அதேநேரம் சாய் இங்-வென் பிரிவினைவாதத்தை வலியுறுத்துவதால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது. தைவானுக்குச் சீனா, "ஒரு நாடு, இரு அரசு" என்ற திட்டத்தை முன்மொழிந்தது. இருப்பினும், தைவான் அரசியல்வாதிகள் இதைத் திட்டவட்டமாக ஏற்க மறுத்துவிட்டனர். சீனாவின் இந்த திட்டத்திற்குத் தைவான் மக்களிடையேயும் சுத்தமாக ஆதரவு இல்லை என்பதும் கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்து உள்ளது.