மும்மொழிகளில் களைகட்டிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் பண்பாட்டு தின விழா
தைபே: தைவான் தமிழ்ச் சங்கம், தைவான் நாட்டில் தமிழர்கள் பண்பாட்டு நிகழ்வுகளை தைவான் மற்றும் பிற நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையில் இந்த ஆண்டு தமிழர் பண்பாட்டு தினவிழாவினை கொண்டாடி சிறப்பித்தது.
தமிழர் பண்பாட்டு தினவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள செங் யுங் ஃபா பவுண்டேஷன் வளாகத்தின் உள்ளரங்கத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர் புடைசூழ விழா சிறப்புற நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய தமிழர் பண்பாட்டு தின விழாவில், தைவான் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம் வரவேற்பு உரையாற்ற, சிறப்பு விருந்தினர்களாக இந்திய தைபே அசோசியேசனின் துணை பொது இயக்குனர் ரிஷிகேஷ் சுவாமிநாதன், டாட்டா கன்சல்டன்ஸியின்(TCS, Taiwan) தைவான் நாட்டிற்கான தலைவர் கார்த்திகேயன் சேதுமாதவன், தேசிய பாதுகாப்பு மருத்துவமனை மற்றும் ட்ரை சர்வீஸ் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் ஷி ஜென் சென், ஃபூஜென் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்டெனி, தேசிய ஷிங் ஹுவா பல்கலைக்கழகத்தின் இந்திய பயிலரங்க இயக்குநர் வெய் செங் வாங் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினர்.
தைவான் தமிழ்ச் சங்கத்தின் முத்தாய்ப்பான நிகழ்வான, 'இளம் ஆராய்ச்சியாளர் விருது" தைவானில் பயிலும் தமிழ் மற்றும் தமிழர் அல்லாத இந்திய ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் பணமுடிப்புடன் கூடிய விருது வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டும் மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையின் எண்ணிக்கை மற்றும் தரத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் ஆறு ஆராய்ச்சியாளர்களுக்கு இவ்விருது வழங்கி கெளரவப்படுத்தியது.
தேர்ந்தெடுக்கபட்ட ஆராய்ச்சியாளர்களான ஸ்ரீராம் பாலசுப்பிரமணியன், சங்கிலி ஆறுமுகம் ஆகியோருக்கு ரிஷிகேஷ் சுவாமிநாதன், சேதுபதி வேல்முருகன், கண்டி ஸ்ரீதர் ஆகியோருக்கு கார்த்திகேயன் சேதுமாதவன், வெற்றி செல்வி, விவேகானந்தன் ஆகியோருக்கு தைவான் தமிழ் சங்கத்தின் முன்னாள் துணைதலைவர் முனைவர் சங்கர் ராமன் இவ்விருதினை வழங்கி கெளரவப்படுத்தினார்கள்.
மேலும் இந்த ஆண்டிற்கான "தமிழ் ஆர்வலர் விருது" தைவானில் தமிழருக்கும், தமிழ் சங்கத்திருக்கும் உறுதுணையாய் சேவைகள் பலப்புரிந்த முனைவர் உ. ராஜேஷ்குமாருக்கு டாக்டர் ஷி ஜென் சென் வழங்கினார். தைவான் தமிழ்ச்சங்கத்தின் வலைத்தளமான "www.taiwantamilsangam.com" கார்த்திகேயன் சேதுமாதவனால் தொடங்கி வைக்கப்பட்டது.
தைவான் தமிழ்சங்க தலைவரின் உதவியாளர், போலந்து நாட்டில் பிறந்து தைவானில் வசிக்கும் பாத் அவர்களுக்கு சிறப்பு கேடயம் தமிழ் சங்கத்திற்கு ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்டது.
இவ்விழாவில் குழந்தைகள் வரைந்த சித்திரங்களுக்கான கண்காட்சி, மழலையர்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் இந்திய மற்றும் தைவான் நடனக்குழுவினரின் தமிழர் பண்புசார் இன்னிசை கச்சேரி, ஆடல் மற்றும் பாடல் என்று இவ்விழா ஒரு கலாச்சாரத்திருவிழாவாக நடைபெற்றது. இவ்விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் சீன மொழி என்று மும்மொழிகளில் தொகுத்து வழங்கப்பட்டது.
விழாவின் நிகழ்ச்சிகள் தைவான் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் முனைவர் ஆகு பிரசண்ணன், மற்றும் துணைச் செயலாளர் சு.பொன்முகுந்தன் ஒருங்கிணைப்பில், தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் தில்லை நாயகம் நன்றியுரையுடன் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.