துணை ராணுவ படையினருக்கு எதிராக வெடித்த மாணவர் போராட்டம்.. வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த போராட்டத்திற்கு அந்நாட்டின் துணை ராணுவப்படைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. அந்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.
இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது.
இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வன்முறையையடுத்து ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது அங்கு, நோபல் பரிசு பெற்ற முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'பங்ளாதேஷ் அன்சார்' எனும் அந்நாட்டின் துணை ராணுவப்படையினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய துணை ராணுவப்படையில் 'பங்ளாதேஷ் அன்சார்யும்' ஒன்று. வங்கதேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இது இருந்து வந்திருக்கிறது. இப்போது இதில் 60 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள், போலீசுக்கும், ராணுவத்திற்கும் உதவி வருகிறார்கள்.
இப்படி இருக்கையில், தங்களின் பணிகள் நிரந்தரப் படுத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேச தலைநகர் டாக்காவில், தலைமை செயலகம் முன்னர் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தின் போது, அந்நாட்டின் மாணவர் தலைவரும், அரசின் ஆலோசகருமான நஹீம் இஸ்லாம் என்பரை போராட்டக்காரர்கள் சிறை பிடித்திருந்தனர்.
இதனையடுத்து மாணவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. இதில் சுமார் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். வன்முறையை அடுத்து போலீசும், ராணுவமும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் போராட்டங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் போராட்டம் வெடித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications