5 இளைஞர்கள் மர்மமரணம்... உயிர் பயத்தில் பேயை ஏமாற்ற பெண்கள் உடை அணியும் தாய்லாந்து ஆண்கள்
தாய்லாந்து கிராமத்தில் பேய் பயத்தில் ஆண்கள் பெண்கள் உடையுடன் இரவில் வலம் வருகின்றனர்.
பாங்காக்: பேய்களிடமிருந்து தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தாய்லாந்து கிராமம் ஒன்றில் ஆண்கள் இரவில் பெண்கள் உடை அணிந்து கொள்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது நாகோன் பனோம் மாகாணம். இங்குள்ள சிறிய கிராமம் ஒன்றில் கடந்த மாதத்தில் மட்டும் இரவு நேரத்தில் ஐந்து இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவர்கள் திடீரென உயிரிழந்தது அக்கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மூடநம்பிக்கைகளில் அதிக நம்பிக்கையுடைய அக்கிராம மக்கள், கணவரை இழந்த பெண் ஒருவரின் ஆவி தான், அந்த இளைஞர்களைக் கொன்றதாக முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தங்கள் ஊரில் உள்ள ஆண்களின் உயிரைக் காக்க அவர்கள் வினோதமான முடிவு ஒன்றை எடுத்தனர்.
அதாவது, பேய் நடமாடும் இரவு வேளைகளில் மட்டும் அக்கிராம ஆண்கள், பெண்கள் உடைகளை அணிந்து, பெண்கள் போன்று ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என்பது தான் அது. அவ்வாறு செய்து கொண்டால், சம்பந்தப்பட்ட பேய் அவர்களை பெண் எனக் கருதி ஒன்றும் செய்யாமல் விட்டு விடும் என்பது அவர்களது நம்பிக்கை.
அதோடு, அனைத்து வீட்டு வாசல்களிலும் இங்கு, 'ஆண்கள் இல்லை' எனவும் எழுதி வைத்தனர். அதனைப் படித்துப் பார்த்துவிட்டு பேய் திரும்பிப் போய்விடும் என்பதும் அவர்களது திட்டம்.
காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, இந்த வினோத பழக்கத்தை அந்த ஆண்கள் செய்ய ஆரம்பித்த உடன், அங்கு ஆண்கள் மர்மமாக உயிரிழப்பது நின்று விட்டதாம்.












Click it and Unblock the Notifications