லண்டன்: 30 ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்த 3 பெண்கள் மீட்பு-2 பேர் கைது
லண்டன்: லண்டனில் வீட்டு வேலைக்காகச் சென்ற இடத்தில் அடிமைகளாக நடத்தப் பட்ட 3 பெண்களை போலீஸ் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் மீட்டுள்ளனர். அப்பெண்களை அடிமைகளாக நடத்திய குற்றத்திற்காக சுமார் 67 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் லாம்பெத் என்ற இடத்தில் இருந்து தன்னார்வ தொண்டு அமைப்புக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய பெண் அழுதுகொண்டே, தானும் தன்னைப்போல் மேலும் இரண்டு பெண்களும் அடிமைகளாக சித்ரவதைப் படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அப்பெண் பேசிய தொலைபேசி எண்ணின் உரிமையாளர் வீட்டிற்கு போலீசாரின் துணையுடன் சென்றனர் அந்த தொண்டு நிறுவனத்தார். வீட்டை தீவிர சோதனை மேற்கொண்டதில், அங்கு சிக்கியிருந்த 69 வயது மலேசிய பெண், 57 வயது அயர்லாந்து பெண் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் ஆகியோரை மீட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், வீட்டு வேலைக்காகச் சென்ற அவர்களை வீட்டின் உரிமையாளர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிமையாக மாற்றி சித்ரவதை செய்தது அம்பலமானது.
அப்பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 67 வயது மதிக்கத்தக்க அந்த வீட்டின் உரிமையாளர்களான தம்பதியினரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.