மலேசியாவில் உயிரிழந்த தமிழக தொழிலாளர்... உடலை மீட்டுத்தர மத்திய அரசிடம் மனைவி கோரிக்கை
மலேசியா: மலேசியாவில் வேலையின் போது ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த பன்னீர் என்ற மீனவரின் உடலை மீட்டுத் தரும்படி, அவரது குடும்பத்தார் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாகப்பட்டிம் மாவட்டம் ஆற்காட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர் பன்னீர் (32). இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியத்தால் மீன் பிடித் தொழிலில் இருந்து விலகிய பன்னீர் மலேசியாவில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி பன்னீரின் மனைவிக்கு மலேசியாவில் இருந்து போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர் வேலை பார்க்கும் போது ஏற்பட்ட விபத்தில் பன்னீர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆனபோதும், பன்னீரின் உடலை மலேசியாவில் இருந்து சொந்த ஊர் கொண்டு வர இயலாமல் அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர்.
உயிரிழந்த பன்னீருக்கு பவஸ்ரீ(10) என்ற மகளும், ரோஹித் (8) என்ற மகனும் உள்ளனர்.
எப்படியும் பன்னீரின் உடலை மீட்டு உரிய இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தார் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசின் உதவியை அவர்கள் கோரி நிற்கின்றனர்.