டோக்கியோ பாராலிம்பிக் 2021: இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த பவீனா படேல்
டோக்கியோ பாராலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா படேல் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனாபென் படேல் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் அதே ஜப்பான் நாட்டில் தொடங்கியது.
இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது. தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் அவர் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டெக்சந்த் தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.

இந்தியாவை சார்ந்த 54 வீரர், வீராங்கனைகள் 9 விதமான விளையாட்டில் பங்கேற்றுள்ளனர். வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.
நான்காவது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார். பிரேசில் நாட்டின் ஒலிவெய்ரா ஜாய்ஸை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதனையடுத்து செர்பிய வீராங்கனை போரிஸ்லாவை எதிர்த்து காலிறுதி போட்டியில் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2ஆம் தரநிலை வீராங்கனையான போரிஸ்லாவை 11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பவினா படேல்.
இதனிடையே ஆடவருக்கான வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகேஷ் குமார் 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார். அவர் மொத்தம் 699 புள்ளிகளைப் பெற்றார். இறுதிச்சுற்றில் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இருவரும் பதக்கம் வெல்வார்கள் என அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications