அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்.. துருக்கி பயணம் கடைசி நேரத்தில் ரத்து.. நடந்தது என்ன?
பொதுவாக, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டுக்கு மற்ற நாடுகளின் தலைவர்கள் நேரில் செல்வதை தவிர்ப்பது வழக்கம். பண விரயத்தை கருத்தில்கொண்டு இதுபோன்ற பயணங்களை தலைவர்கள் தவிர்ப்பார்கள்.
அங்காரா: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார்.
ஷெபாஸ் ஷெரீப் வருகை தருவதை விரும்பாதது போன்ற சமிக்ஞை துருக்கியிடம் இருந்து தென்பட்டதால், இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் அப்படி என்ன செய்தார்.. எதற்காக அவருக்கு இந்த அவமதிப்பு நேர்ந்தது என்பது குறித்து இங்கு காண்போம்.

உருக்குலைந்த துருக்கி
மிக மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. துருக்கி வரலாற்றின் கறுப்பு பக்கமாக இந்த நிலநடுக்கம் மாறியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து அநாதையாக மாறியுள்ளன.

ஆதரவுக்கரம் நீட்டிய இந்தியா
கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள துருக்கிக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவில் இருந்து பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவ வீரர்களும் மீட்புப் பணிக்காக துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் இந்தியா செய்து வருகிறது. பாகிஸ்தான் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.

நேரில் வருவதாக கூறிய பாக்., பிரதமர்
இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கிக்கு இன்று செல்வதாக இருந்தார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபரிடம் இரங்கல் தெரிவிக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திட்டமிட்டிருந்தார். பொதுவாக, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டுக்கு மற்ற நாடுகளின் தலைவர்கள் நேரில் செல்வதை தவிர்ப்பார்கள். ஏனெனில், அப்படி தாங்கள் செல்லும் போது தங்களை வரவேற்க அதிகப்படியான பணமும் செலவாகும். மேலும், பாதுகாப்புக்கு ராணுவமும் போலீஸாரும் வர வேண்டும் என்பதால் இதுபோன்ற பயணங்களை தவிர்த்து விடுவார்கள்.

துருக்கி பதில்.. அவமானம்..
ஒரு நாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கும். ஆனால், இது எப்படி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தெரியாமல் போனது என தெரியவில்லை. தனது வருகையை பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் மூலம் ஷெபாஸ் ஷெரீப் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். ஆனால், அடுத்த சில மணிநேரங்களிலேயே துருக்கி பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஆசம் ஜமீல் அந்த ட்வீட்டுக்கு பதில் அளித்திருந்தார். அதில், "இந்த நேரத்தில் துருக்கிக்கு தேவைப்படுவது எல்லாம் உதவிகள்தான். பிற நாட்டு தலைவர்களை உபசரிப்பதை பிறகுதான் பார்க்க முடியும். எனவே நிவாரண பணியாளர்களை மட்டும் அனுப்புங்கள்" என அவர் குறிப்பிட்டிருந்தார். இது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு நேர்ந்த அவமானமாக பாகிஸ்தான் கருதியது. இதையடுத்து, தனது பயணத்தை கடைசி நேரத்தில் ஷெபாஸ் ஷெரீப் ரத்து செய்தார். இடம் பொருள் ஏவல், ஒரு நாட்டின் பிரதமருக்கு தெரிந்திருக்க வேண்டாமா?












Click it and Unblock the Notifications