26/11 மும்பை தாக்குதல்: தாஜ் ஹோட்டல் மீது வழக்கு போடும் பாதிக்கப்பட்ட இங்கிலாந்துக்காரர்
லண்டன்: 26/11 மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரவிருக்கிறார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பைக்குள் புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 160 பேர் பலியாகினர். தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்கு தங்கியிருந்தவர்களில் பலர் பலியாகினர்.
இந்த சம்பவம் நடந்த போது இங்கிலாந்தைச் சேர்ந்த வில் பைக் என்பவர் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார். தீவிரவாத தாக்குதலில் அவரது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இந்த நிலையில் பைக் தாஜ் ஹோட்டலின் உரிமையாளர்கள் மீது லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டும் போதிய பாதுகாப்பு அளிக்காத ஹோட்டல் மீது அவர் வழக்கு தொடர்கிறார். 2008ம் ஆண்டில் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த டாடா குழுமத்தின் அப்போதைய தலைவர் ஹோட்டலை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை உறுதிபடுத்தியதாக பைக்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.