3500 ரஷ்ய வீரர்கள் பலி! விமானங்கள் சின்னாபின்னம்! போரில் திடீர் "ட்விஸ்ட்".. உறுதியுடன் உக்ரைன்!
மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து கொடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போரில் உக்ரைனுக்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டது போலவே ரஷ்யா தரப்பிற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனில் போர் செய்யும் அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்டார். உக்ரைன் உள்ளே புகுந்த ரஷ்ய படைகள் அங்கு மோசமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. முக்கியமாக கிழக்கு உக்ரைனை குறி வைத்து ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ரஷ்யாவின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் இருக்கும் முக்கிய நகரங்களை உக்ரைன் கைப்பற்றிவிட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சரணடைய வேண்டாம்...ரஷ்யா நிறுத்தாதவரை ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை - ஜெலன்ஸ்கி
உறுதியாக இருக்கிறார்
ஆனால் உக்ரைனில் பெரிய நகரங்களை ரஷ்யா பிடிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் வோலோடிமர் சொலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நாங்கள் இந்த நாட்டை விட்டு போக மாட்டோம். ரஷ்யா எங்கள் நாட்டை அபகரிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த இரவை நாங்கள் கடக்க வேண்டும். நாங்கள் முதுகை காக்க மாட்டோம். எங்கள் நாட்டை ரஷ்யா பிடித்துவிட்டதாக நிறைய பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. அப்படி இல்லை. எங்கள் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிலடி
உக்ரைன் அதிபர் இவ்வளவு உறுதியாக பேசி உள்ள நிலையில்தான் உக்ரைன் தலைநகர் கீவை பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறதாம். உக்ரைன் தலைநகர் கீவ் எல்லைக்குள் நேற்று ரஷ்யா புகுந்தது. இன்று அங்கே பீரங்கிகள் மூலமும், விமானங்கள் மூலமும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் உக்ரைன் தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றினால் உடனே அங்கே உக்ரைன் படைகள் என்று அந்த பகுதியை மீட்டு வருகிறது.
வீழாத கீவ்
இதனால் கீவ் இன்னும் வீழாமல் தொடர்ந்து உறுதியாக நின்று கொண்டு இருக்கிறது. ரஷ்யாவின் படைபலம் உக்ரைனை விட அதிகம். ஆனாலும் உக்ரைன் - ரஷ்யா இரண்டும் சோவியத் நாடுகள். ஆயுதங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது. போர் வியூகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான். இதனால் உக்ரைனும் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால்தான் உக்ரைனின் தலைநகர் கீவ் இன்னும் ரஷ்யா வசம் செல்லாமல் உறுதியாக உள்ளது.
ரஷ்யா இழப்பு
இந்த நிலையில் போரில் உக்ரைனுக்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டது போலவே ரஷ்யா தரப்பிற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஷ்யாவின் 3500 வீரர்களை கொன்றுவிட்டோம் என்று கூறி உள்ளது. அதேபோல் 200 ரஷ்ய வீரர்களை சிறை பிடித்து உள்ளோம் என்றும் உக்ரைன் தெரிவித்து உள்ளது. தங்கள் நாட்டில் இருந்து 137 பேர் பலியாகிவிட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
விமானம்
ஏற்கனவே ரஷ்யாவின் 5 பீரங்கிகளை காலிசெய்துவிட்டோம். முதல் நாள் போரில் 5 விமானங்கள், 1 ஹெலிகாப்டரை வீழ்த்தினோம். இப்போது மீண்டும் இன்னொரு விமானத்தை வீழ்த்தி இருக்கிறோம். ரஷ்யா இதில் தொடர்ந்து சேதங்களை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்யா பெரிய நகரங்கள் எதையும் பிடிக்கவில்லை. பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று உக்ரைன் கூறியுள்ளது. இதனால் போரில் உக்ரைன் கை ஓங்கி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
ரஷ்யா மறுப்பு
ஆனால் இந்த பலி எண்ணிக்கை பற்றிய விவரங்களை ரஷ்யா ஏற்கவில்லை. தங்கள் தரப்பில் ஏற்பட்ட சேதங்கள் பற்றி ரஷ்யா இதுவரை வாய் திறக்கவில்லை. இந்த நிலையில்தான் நேற்று ரஷ்யா உக்ரைனிடம் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. உக்ரைனுக்கு உயர்மட்ட கமிட்டியை அனுப்ப ரஷ்யா நினைத்தது. ரஷ்யா தொடர் சேதங்களை சந்திப்பதால் இப்படி திடீரென போரில் பின்வாங்கி பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளதோ என்ற கேள்வியையும் இது எழுப்பி உள்ளது.