கிழக்கு உக்ரைனில் பிரிவினைக்கு ஆதரவாக 90% பேர் வாக்களிப்பு
டொனெட்ஸ்க்: கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்கள் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்வது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவாக 90% பேர் வாக்களித்துள்ளனர்.
உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக செயல்பட்டு வந்த கிரிமியாவில் கடந்த மார்ச் மாதம் திடீரென கிளர்ச்சி ஏற்பட்டது. உக்ரைன் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்திய கிளர்ச்சியாளர்கள், கிரிமியாவை ரஷியாவுடன் இணைப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தினர்.
இதில் ரஷியாவுடன் இணைவதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கிரிமியா பகுதி ரஷியாவுடன் இணைக்கப்பட்டது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியா மீது அந்நாடுகள் பொருளாதார தடையும் விதித்தன.
இந்நிலையில் கிரிமியாவை தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதியிலும் டொனெட்ஸ்க், லுகன்ஸ்க் மாகாணங்களில் கிளர்ச்சி ஏற்பட்டது. அங்குள்ள 12 நகரங்களில் உள்ள அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக டொனெட்ஸ்க், லுகன்ஸ்க் மாகாணங்கள் இரண்டும் உக்ரைனில் பிரிந்து செல்வது குறித்து கிளரிச்சியாளர்கள் தன்னிச்சையான பொதுவாக்கெடுப்பை நடத்தினர். இந்த பொதுவாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவாக 90% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த வாக்கெடுப்பை உக்ரைன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிராகரித்துள்ளன.