போதைப்பொருள் கடத்தல் விஷயத்தில் இந்தியாவும், சீனாவும் ஒன்னுதான்.. முத்திரை குத்திய அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், போதைப்பொருள் கடத்தல் விஷயத்தில் இந்தியாவும், சீனாவும் ஒரே புள்ளியில்தான் இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துல்ஸி காபார்ட் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்த பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார். இதனையடுத்துதான் உள்வுத்துறை அறிக்கை வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ஃபேன்டனையில் எனும் போதைப்பொருள் பயன்பாடு அந்நாட்டு அரசுக்கு மிகுந்த சவாலானதாக இருக்கிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அமெரிக்காவில் 12-17 வயதுக்குட்பட்டவர்களில் 3-5% பேர் ஃபேன்டனையிலை ஒருமுறையாவது முயற்சி செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் கூட இந்த போதை பொருளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஃபேன்டனையில் போதைக்கு அடிமையானவர்கள் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதேபோல, குற்றங்களில் ஈடுபடுபவர்களையும், போதைக்கு அடிமையானவர்களையும் மீட்டு மறுவாழ்வு மையங்களில் அவர்களுக்கான சிகிச்சை அளிப்பதும் அதிக செலவுடையதாக மாறியிருக்கிறது. எனவே இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
மெக்சிகோவில் உள்ள சினலோவா (Sinaloa) எனும் கும்பல்தான் இந்த போதை பொருளை அமெரிக்காவுக்குள் கடத்துகிறது. இந்த கும்பல் மற்ற நாடுகளிலிருந்து ரசாயன பொருட்களை வாங்கி, அதை மெக்சிகோவில் வைத்து போதைப்பொருளாக மாற்றி பின்னர் அமெரிக்காவுக்குள் சப்ளை செய்கிறது. இந்த கும்பலுக்கு 'ரா' மெட்டீரியலை சப்ளை செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் சீனா இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
இந்த சப்ளை ஏதோ இன்று நேற்று நடக்கும் விஷயம் கிடையாது. பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகம் (DEA) இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சில முக்கிய தகவல்களை வழங்கியது. இதனையடுத்து மத்தியப்பிரதேசம் இந்தூரில் அமைந்திருந்த சட்டவிரோத ஃபேன்டனைல் ஆய்வகத்தை மத்திய அரசு கண்டுபிடித்து அழித்தது.
கடந்த 2018ல் விஷயம் சீரியஸாவதை உணர்ந்த சீன அரசு, ஃபேன்டனைல் பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. எனவே சீனாவிலிருந்து சினலோவா கும்பலால் போதை பொருளை வாங்க முடியவில்லை. ஆகையால் போதைப்பொருள் உற்பத்தி மையத்தை இந்தியாவுக்கு மாற்றியதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் இந்தியாவின் பெயர் அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது.
ஆனால் உண்மையான காரணம் இதுவாக இருக்க வாய்ப்பு கிடையாது. இந்தியா மீது வரியை விதிக்க ஏதாவது ஒரு மொக்கை காரணத்தை டிரம்ப் தேடிக்கொண்டிருக்கிறார். எனவேதான் இப்படி ஒரு பழி போடப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!












Click it and Unblock the Notifications