மலேசிய விமான விபத்து- பகிரங்கமான, ஒளிவுமறைவற்ற சர்வதேச விசாரணைக்கு ஒபாமா அழைப்பு
வாஷிங்டன்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்ய எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக துரிதமான, பகிரங்கமான, ஒளிவுமறைவில்லாத விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது விமான விபத்தில் இறந்த அனைவருக்கும், குறிப்பாக நெதர்லாந்து நாட்டு பயணிகளுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் அவர் ரூட்டிடம் கூறுகையில், அமெரிக்க அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய காத்திருக்கிறது. சர்வதேச அளவிலான பகிரங்கமான, துரிதமான விசாரணையை அமெரிக்கா விரும்புகிறது.

சர்வதேச விசாரணையாளர்கள் துரிதமான முறையில் விசாரணையைத் தொடங்க அனைத்து நடைமுறைகளையும் உடனடியாக முடுக்கி விடவும் அமெரிக்கா விரும்புகிறது. மேலும் மீட்புப் பணியில் உதவிடவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றார் ஒபாமா.
உக்ரைன் - மலேசியாவுடன் ஒபாமா ஆலோசனை
இதேபோல உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸ்ஸாக் ஆகியோருடனும் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.
அப்போது விமான விபத்து நடந்த இடத்திலிருந்து அதுதொடர்பான ஆதாரங்கள் எதையும் யாரும் அழித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். சர்வதேச விசாரணை நடைபெறும் வரை இதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications