பள்ளிளில் யோகா வகுப்புகளை நடத்துவதில் தவறில்லை... அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு
கலிபோர்னியா: பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு யோகாசான வகுப்புகளை நடத்துவதில் எந்தவிதமான மத மீறலும் இல்லை என்று கலிபோர்னியா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் யோகாசனம் மூலம் இந்து மதத்தைப் பரப்புகிறார்கள் என்று கூற முடியாது என்றும் அது கூறியுள்ளது. மாணவர்களின் மத உரிமைகள் இதனால் பாதிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தீர்ப்பில் கூறியுள்ளது.

சான்டியாகோவில் உள்ள ஒரு அப்பீல் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. என்சினிடாஸ் யூனியன் ஸ்கூல் என்ற பள்ளிக்கூடத்தில் யோகாசனம் கற்றுத் தரப்படுகிறது. இதை எதிர்த்து ஒரு மாணவனின் பெற்றோரான ஸ்டீபன் - ஜெனீபர் தம்பதி வழக்குத் தொடர்ந்தனர்.
இது மத உரிமைகளைப் பாதிப்பதாகவும், இந்து மதத்தைப் புகுத்தும் முயற்சி என்றும் அந்த வழக்கில் அந்த தம்பதியினர் தெரிவித்தனர். இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் இறுதியில், 3 நீதிபதிகளுமே ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கினர்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், யோகாசனம் என்பது மதம் சார்ந்ததல்ல. சில விஷயங்களில் அது மதம் சார்ந்தது போலத் தெரியலாம். ஆனால் எந்தவிதமான மதத்திற்கு ஆதரவாகவோ அல்லது இறை வழிபாட்டு நம்பிக்கையை மீறும் வகையிலோ அது இல்லை. மேலும் இது கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதாகவும் கருதப்பட முடியாது. இந்து மதத்தைப் புகுத்துவதாகவும் கூற முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் பரவலாக பல்வேறு பள்ளிகளில் யோகா கற்றுத் தரப்படுகிறது. இருப்பினும் இந்தியர்கள் அதிகம் உள்ள கலிபோர்னியாவில்தான் அனைத்து பள்ளிகளிலும் முழு நேர ஆசிரியர்களைக் கொண்டு யோகா கற்றுத் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் யோகாசனத்தைக் கற்றுக் கொள்வதில் பல அமெரிக்க கிறிஸ்தவ பெற்றோர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications