சோலி முடிஞ்சு.. பிள்ளையை கிள்ளி விட்ட அமெரிக்கா! உச்சகட்ட கோபத்தில் ஈரான்! பற்றி எரியும் மேற்காசியா!
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் கொடி ஏற்றிய சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றிய சம்பவம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது ராணுவ நடவடிக்கைகள் மூலம் பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நீரிணை வழியாக உலகின் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் செல்லும் நிலையில், அது மூடப்பட்டதால் உலக சந்தைகளிலும் பதற்றம் உருவானது. இந்த மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்காலிக போர் நிறுத்தம்
குறிப்பாக பாகிஸ்தான் அரசு நடத்திய முயற்சியின் பின்னர், இரு தரப்பும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தன. அதன் ஒரு பகுதியாக இஸ்லாமாபாத் நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான குழுவும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின.
ஹார்முஸ் ஜலசந்தி
இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்த முக்கிய உடன்பாடும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஈரானிய துறைமுகங்கள் மீது கடற்படை கண்காணிப்பை தொடரும் என அமெரிக்கா அறிவித்தது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என ஈரான் முதலில் அறிவித்தாலும், சில மணி நேரங்களில் தனது முடிவை மாற்றிக் கொண்டு, அங்கு செல்ல முயன்ற கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
ஈரான் சரக்கு கப்பல்
இந்த சூழ்நிலையில், அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பை மீறி, ஈரான் கொடி ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்த பின்னரும் அது தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, யுஎஸ் மரைன்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து அந்த கப்பலை தடுத்து நிறுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை
அமெரிக்க தரப்பின் தகவலின்படி, அந்த கப்பல் நிற்காததால் அதன் இயந்திரப் பகுதியில் சேதம் ஏற்படுத்தி, கடலில் அதே இடத்தில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆயுதம் ஏந்திய அமெரிக்க கடற்படை வீரர்கள் கப்பலுக்குள் சென்று, அதனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் என்ன பொருட்கள் உள்ளன என்பது குறித்து தற்போது ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் கோபம்
இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது என ஈரான் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் கூட்டு ராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது. இதனால், தற்காலிகமாக அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய கிழக்கு
இரண்டு வார கால போர் நிறுத்தம் முடிவடையும் காலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து மோசமடைந்தால், மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பெரிய அளவிலான ராணுவ மோதல் உருவாகும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications