வங்கதேசத்தில் நீடிக்கும் வன்முறை.. அடித்து நொறுக்கப்பட்ட இந்து கோயில்கள்! இந்துக்கள் மீது தாக்குதல்
டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். இந்நிலையில், வங்கதேசத்தில் இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இந்தியாவின் அண்டை நாடுதான் வங்கதேசம். பொருளாதார வளர்ச்சியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தன்னிறைவு பெற்றிருந்த இந்த நாட்டில் சமீப காலமாக அரசியல் கொந்தளிப்பு நீடித்து வந்திருந்தது. கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் அவாமி லீக் கட்சி பெற்றி பெற்று, அதன் தலைவர் ஹசீனா பிரதமராக பதவி வகித்து வந்திருந்தார். ஆனால் கடைசி தேர்தலின்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. எனவே கடைசியாக நடந்த பிரதமர் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால் வாக்குப்பதிவும் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. இப்படி இருக்கையில்தான் இடஒதுக்கீடு பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
வங்கதேச சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே சிறுபான்மையினர், பெண்கள், நலிவடைந்தோர் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டுடன் இதையும் சேர்த்தால் 56% சதவிகிதம் வருகிறது. ஆக அரசு பணியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீட்டில் சென்றுவிட்டால் சாமானிய மக்கள் என்ன செய்வது? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு எதிராக அந்நாட்டின் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் தீர்ப்புகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வந்தன. எனவே மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு எதிராக ஹசீனாவின் கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பும், காவல்துறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. இது ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது. இந்த மோதலில் ஏற்பட்ட உயிர்ப்பலிகள், போராட்டத்தை தீவிரமாக்கின. அடக்குமுறையும் தீவிரமாகியது. இப்படியாக வன்முறை வெடித்தது.
இதன் பின்னரும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதை உணர்ந்த ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இருப்பினும் வங்கதேசத்தில் வன்முறை இன்னும் குறையவில்லை. அங்கு சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்து கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இந்து புத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சிலின் பொதுச் செயலாளர் ராணா தாஸ்குப்தா கூறுகையில், "சிறுபான்மையினருக்கு சொந்தமான கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டிருக்கின்றன. கடைகளும், வீடுகளும் சூறையாடப்பட்டிருக்கின்றன. 10 இந்து கோயில்கள் தாக்கப்பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
தெற்கு பாகர்ஹாட் மாவட்டத்தில் இந்து ஒருவர் கலவரத்தில் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் டாக்காவுக்குச் சென்றபோது, அவரைச் சந்தித்த பிரபல இந்து இசைக்கலைஞர் ராகுல் ஆனந்தாவின் வீடும் எரிக்கப்பட்டது என்றும், சிறுபான்மை முஸ்லிம் பிரிவான அஹ்மதியர்களின் சில வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவை அனைத்தும் அவாமி லீக் கட்சியின் உறுப்பினர்கள்தான் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications