தென் சீனக் கடல் பகுதியில் வியட்நாமின் ராக்கெட் லாஞ்சர்கள்... சீனா கடும் மிரட்டல்
பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியை நோக்கி நடமாடும் ராக்கெட் லாஞ்சர்களை வியட்நாம் நகர்த்தி வருவது "பெரும் தவறு" என்றும் போரின் விளைவுகளை மறந்துவிட வேண்டாம் என்றும் சீன அரசு ஊடகம் மிரட்டியுள்ளது.
தென் சீனக் கடல் பகுதி யாருக்கு சொந்தம் என்பது குறித்த சர்ச்சை சீனவிற்கும் வியட்நாமுக்கும் இருந்து வரும் நிலையில், வியட்நாம் ராக்கெட் லாஞ்சர்களை தென் சீனக் கடல் பகுதியில் நகர்த்தி வருகிறது.
இதனையடுத்து, வியட்நாமின் இந்த நடவடிக்கையை பெரும் தவறு என்றும் 1979ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் கற்றதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வியட்நாமை சீன ஊடகம் மிரட்டியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் இப்பகுதியின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன. இந்த நிலையில், தென் சீனக் கடல் பகுதி தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு சர்வ தேச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அந்த வழக்கின் முடிவில் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமை இல்லை என்று சர்வ தேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பை ஏற்காத சீனா
சர்வதேச நீதிமன்றத்தின் இத் தீர்ப்பை ஏற்க மறுத்த சீனா தொடர்ந்து தென் சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடி வருவதோடு கடல் பகுதியில் சீனா ராணுவ நிலைகளை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தக் கடல் பகுதி முழுவதையும் செயற்கைக் கோள் மூலம் காண்காணித்தும் வருகிறது.
வியட்நாமின் ராக்கெட் லாஞ்சர்
இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சீனாவின் விமான ஓடுபாதைகள் மற்றும் ராணுவ நிலைகளை குறி வைத்து ராக்கெட் லாஞ்சர்களை தென் சீனக் கடல் பகுதியில் வியட்நாம் நகர்த்தி வருகிறது.
சீனா குற்றச்சாட்டு
தென் சீனக் கடல் பகுதியில் உள்ள 50 தீவுகளில் 29 தீவுகளை சட்ட விரோதமாக வியட்நாம் ஆக்கிரமித்துள்ளது என்றும் விமான ஓடுபாதைகள் அதில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சீனா வியட்நாம் மீது குற்றம்சாட்டி வருகிறது.
சீன ஊடகம் எச்சரிக்கை
இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் மீது பிடியை இறுக்கவே வியட்நாம் இவ்வாறு செய்வதாக சீன ஊடகம் சாடியுள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற போரின் விளைவுகளை வியட்நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வியட்நாமுக்கு அது எச்சரிக்கை விடுத்துள்ளது.