என்னை நோக்கி பாய்ந்த தோட்டா.. அந்த நொடி நடந்தது என்ன! துப்பாக்கி சூடு குறித்து இம்ரான் கான் பரபர
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் மீதான துப்பாக்கிச் சூட்டிற்குப் பின், அந்தச் சம்பவம் குறித்து முதல்முறையாக அவர் சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இப்போது அங்குள்ள அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அதற்கு அதிகப்படியான மக்கள் ஆதரவும் உள்ளது.
இம்ரான் கான் போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் அதற்குப் பெரிய பலன் இல்லை. பாகிஸ்தான் மக்கள் ஆதரவு இம்ரான் கானுக்கு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு
நேற்றைய தினம் இம்ரான் கான் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேரணியில் கலந்து கொண்டார். அங்கு அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசும் போது திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இம்ரான் கான் பேசும் போது இடது பக்கத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். நல்வாய்ப்பாக, கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த நபரால் சரியாகக் குறி பார்த்துச் சுட முடியவில்லை.

இம்ரான் கான்
இதன் காரணமாகவே இம்ரான் கானுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை. இம்ரான் கானில் வலது காலில் மட்டும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ஒருவருக்கே இப்படியொரு நிலையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடவுளுக்கு நன்றி
இந்தச் சூழலில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இம்ரான் கான் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அவர், "துப்பாக்கிச் சூடு நடந்த போது, அங்குக் குழப்பமான சூழல் நிலவியது. நான் வாழ்வதற்குக் கடவுள் எனக்கு இன்னொரு வாய்ப்பை அளித்து உள்ளார். நிச்சயம் போராட்டத்தைக் கைவிட மாட்டேன். தொடர்ந்து மக்களுக்காகப் போராடுவேன்" என்று அவர் கூறியுள்ளார்

சிகிச்சை
அந்த வீடியோவில் காயமடைந்த இம்ரான் கான் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவது போல உள்ளது. நல்வாய்ப்பாக இம்ரான் கானுக்கு இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக துப்பாக்கிச் சூடு நடந்த சில நிமிடங்களிலேயே மருத்துவமனைக்குச் செல்லும் முன் அவர் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துத் தான் நலமுடன் இருப்பதைக் கூறிவிட்டே சென்றிருந்தார்.

காரணம் அந்த மூன்று பேர்
தன் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னணியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோர் உள்ளதாக இம்ரான் கான் நம்புகிறார். அவர்களுக்கு எதிராக இம்ரான் கான் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாலேயே இந்த கொலை முயற்சி சம்பவம் அரங்கேறி உள்ளதாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

போராட்டம் அறிவிப்பு
சமீபத்தில் கூட பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் பல ரகசியங்கள் தனக்குத் தெரியும் என இம்ரான் கான் கூறியிருந்தார். அவர் இப்படிக் கூறி சில நாட்களில் இந்த தாக்குதல் நடந்து உள்ளதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இம்ரான் கான் மீதான இந்தத் தாக்குதலை அவரது கட்சியினர் போராட்டத்தையும் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications