இஸ்ரேல் யுத்தம்.. புதிய குண்டை போட்ட பிரதமர் நெதன்யாகு.. சொன்ன அந்த 2 வார்த்தை.. பதறும் உலக நாடுகள்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடரும் நிலையில், இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தம் கடந்த 3 வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

காசா மீதான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் ஏவுகணை தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் காசாவில் நுழைந்து இஸ்ரேல் பீரங்கிகளும் இலக்குகளைக் குறிவைத்து அழித்து வருகிறது.
பெஞ்சமின் நெதன்யாகு: இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பாலஸ்தீனிய பயங்கரவாதிகளான ஹமாஸ் உடனான போர் இரண்டாம் கட்டத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார். கூடுதலாகத் தரைப்படைகள் இப்போது காசாவை நோக்கிச் சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர், ஹமாஸ் மீது தரை, வான் மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த சண்டையில் கொல்லப்பட்டவர்கள், ஹமாஸ் படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்தேன். அப்பாவி மக்கள் கடத்தப்பட்டது மனித குலத்திற்கு எதிரான குற்றம். பிணையக் கைதிகள் அனைவரையும் நிச்சயம் மீட்டுக் கொண்டு வருவோம். அதில் எந்தவொரு சமரசமும் இருக்காது.. அதற்கான நடவடிக்கை தான் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த இரண்டு வார்த்தை: காசா மீதான தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம்.. இது மிஷனை வெற்றிகரமாக முடிக்க உதவும். ஹமாஸுக்கு எதிராக இப்போது சண்டையிடுகிறோம்.இதை எங்கள் இரண்டாம் விடுதலை போர் என்றே சொல்லலாம். இந்த போர் நீண்டதாகவும் மிகவும் கடினமான ஒன்றாகவும் இருக்கும். இஸ்ரேல் படைகள் தங்கள் தாய் நாட்டிற்காகப் போராடுகிறார்கள். நிச்சயம் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்.
ஹமாசுக்கு எதிராக அனைத்து வழிகளிலும் போராடுவோம். அவர்களை முற்றிலுமாக அழித்து ஒழிப்போம். இந்தப் போரில் வெல்வது தான் எங்களுக்கு முக்கியமான நோக்கம். காசா மீதான தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இது ஒட்டுமொத்தமாகப் போர்க்கால அமைச்சரவையும் பாதுகாப்பு அமைச்சரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவாகும்.
முடிவில்லை தொடக்கம்: நாட்டின் எதிர்காலம், வீரர்களின் பாதுகாப்பு என இரண்டையும் உறுதி செய்யவே இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த சண்டையை ஆரம்பித்ததே அவர்கள்தான். அதற்கு நாங்கள் பதிலடி தான் கொடுத்து வருகிறோம். பாதுகாப்பான தரைவழித் தாக்குதல்களை நடத்தக் கடந்த சில நாட்களாக ஏவுகணை தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளோம். இந்தத் தாக்குதலில் நாங்கள் பல பயங்கரவாதிகளை அழித்துள்ளோம்.. இந்தப் போர் முடியவில்லை.. இப்போது தன் தொடங்குகிறது..
இஸ்ரேல் வீரர்கள் தங்கள் தாய் நாட்டிற்காகத் துணிச்சலாகப் போராடி வருகிறார்கள். இஸ்ரேல் வீரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக்கச் சொல்லும் குற்றச்சாட்டுகளில் எந்தவொரு ஆதாரமும் இல்லை. சிலர் வேண்டுமென்றே இந்தப் பொய்களைப் பரப்பி வருகிறார்கள். வடக்கு காசாவில் தொடர்ந்து தாக்குதலை நாங்கள் தீவிரப்படுத்தி வருகிறோம். எனவே அங்குள்ள மக்கள் உடனடியாக தெற்கு காசா பகுதிக்குச் செல்ல வேண்டும்.
போராடுவோம்: இது நன்மைக்கும் தீமைக்கும்... இருளுக்கும் ஒளிக்கும் மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையே நடக்கும் போராகும். இந்தப் போரில் நாங்கள் உறுதியாகவும், முன்னெப்போதையும் விட ஒற்றுமையாகவும் இருக்கிறோம். இந்தப் போரில் நிச்சயம் வென்று காட்டுவோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications