பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப். ஜெனரால் ஆசிம் முனிர் பெயர் பரிந்துரை.. யார் இவர்?
பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் சையது ஆசிம் முனிர் என்பவரை பாகிஸ்தான் பிரதமர் பரிந்துரைத்துள்ளார். அதைப் போல படைத் தளபதிகளின் கூட்டுக் குழு தலைவராக (Chairman of Joint Chiefs of Staff Committee) லெப். ஜெனரல் சஹிர் ஷம்ஷத் மிர்சா என்பவரை பரிந்துரைத்துள்ளார் பிரதமர்.
இந்தப் பரிந்துரைக்கு அந்நாட்டு ஜனாதிபதி முறைப்படி ஒப்புதல் அளித்து நியமனம் செய்வார்.
பாகிஸ்தானின் தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் காமர் ஜாவேத் பாஜ்வா நவம்பர் 29-ம் தேதி ஓய்வு பெறுவதை ஒட்டி புதிய பரிந்துரைகள் அடங்கிய குறிப்பினை ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிவைத்துள்ளார்.
இந்தத் தகவலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஜனாதிபதி ஆல்வியின் அலுவலகத்துக்கு இந்தப் பரிந்துரை சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இனி அவரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தப் போகிறார்களா அல்லது சர்ச்சைக்குள்ளாக்கப் போகிறார்களா என்று பார்க்கவேண்டும்.
பாகிஸ்தான் சட்டப்படி இந்த நியமனங்களை மேற்கொள்வது பாகிஸ்தான் பிரதமரின் உரிமை. அவரது பரிந்துரையே இறுதியானது என்று கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பரிந்துரை அடங்கிய குறிப்பை பிரதமர் நிறுத்தி வைக்கவோ, கேள்வி கேட்டு திருப்பி அனுப்பவோ முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
சையது ஆசிம் முனிர் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானுக்கு ஆட்சேபனைகள் இருக்கின்றன என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் எப்படி முடியும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எல்லோரது கண்களும் தற்போது ஜனாதிபதி முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
யார் இந்த சையத் ஆசிம் முனிர்?
லெப். ஜெனரல் சையது ஆசிம் முனிர் என்பவரை அடுத்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி பொறுப்புக்குத் தேர்வு செய்துள்ளார் பிரதமர். பாகிஸ்தான் ராணுவத்தின் குவார்டர்மாஸ்டர் ஜெனரலாக இப்போது இவர் பணியாற்றி வருகிறார்.
ராணுவம் பரிந்துரைத்த 6 பேர் அடங்கிய பட்டியலில் உள்ள தளபதிகளில் அனுபவத்தில் மூத்தவர் முனிர்தான். லெப்டினென்ட் ஜெனரலாக இவரது பதவி நவம்பர் 27ம் தேதி முடிவுக்கு வருகிறது. ஆனால், இவரை ராணுவத் தளபதியாக்கும் பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றால் இவர் ராணுவத் தளபதியாக மூன்றாண்டு காலம் பதவி வகிக்க முடியும்.
ஓய்வு பெறும் ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வாவுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் ஆசிம் முனிர். இம்ரான் கான் பிரதமர் பதவியேற்ற பிறகு 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ.) தலைமை இயக்குநராக இவர் நியமிக்கப்பட்டார்.
ஆனால், வேறு எந்த ஐஎஸ்ஐ தலைவரை விடவும் குறைவான காலமே இவர் அந்தப் பதவியில் இருந்தார். அதாவது இவர் 8 மாத காலத்துக்குப் பிறகு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போதைய பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்திய காரணத்தால் இவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பிறகு அவர் குஜ்ரன்வாலா கார்ப்ஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டார். பிறகு அவர் குவார்ட்டர்மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். எல்லைப்புறப் படை ரெஜிமென்ட்டில் இருந்து வந்தவர் ஆசிர் முனிர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்