"13 லட்சம் வீரர்களை கொண்ட இந்தியாவால் கூட முடியல.." வாயை விட்ட பாகிஸ்தான்! தரமான பதிலடி தந்த இந்தியா
இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் குறித்தும் காஷ்மீர் குறித்தும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக காஷ்மீரை பாகிஸ்தானின் நரம்பு என ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் மோதல் போக்கே இருந்து வந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் வளர்த்துவிடும் பயங்கரவாத அமைப்புகளே இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள காஷ்மீர் குறித்தும் பாகிஸ்தான் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளைத் தெரிவிக்கும். இதற்கிடையே இப்போதும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் இதுபோல தான் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காஷ்மீர் குறித்து சர்ச்சை
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் சூழலில், அது பாகிஸ்தானின் கழுத்து நரம்பு போன்றது என்றும் அதை பாகிஸ்தான் ஒருபோதும் மறக்காது என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் கூறியுள்ளார். மேலும், 1947இல் பிரிவினைக்குக் காரணமாக இருந்த இரு தேசக் கோட்பாட்டுச் சரி என்றும் அதற்கான விளக்கத்தை அவர் அளித்தார்.
வெளிநாட்டில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டினர் தங்கள் ராணுவ ஜெனர் உடன் கலந்துரையாடும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தான் அசிம் முனீர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் தான் நாட்டின் தூதர்கள் என்றும் அவர்கள் ஒரு உயர்ந்த சித்தாந்தம் மற்றும் கலாச்சாரத்தை கொண்ட நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது என்றும் கூறினார்.
வரலாற்றை சொல்லணுமாம்
அவர் மேலும் பேசுகையில், "நீங்கள் நிச்சயமாக உங்கள் குழந்தைகளுக்கு பாகிஸ்தானின் வரலாற்றைச் சொல்ல வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று நம் முன்னோர்கள் நினைத்தார்கள். மதங்கள், பழக்கவழக்கங்கள், மரபுகள், எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் என அனைத்துமே வேறுபட்டவை. அதுதான் இரு தேசக் கோட்பாட்டின் அடித்தளம்" என்றார்
பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் இந்தியா இருந்தபோது சுதந்திரத்திற்குப் பல்வேறு தலைவர்களும் போராடியது அனைவருக்கும் தெரியும். அப்போது சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் முஸ்லிம்களுக்குத் தனி நாடு தேவை என்று சில தலைவர்கள் கருதினர். அதுதான் இரு நாடுகள் கோட்பாடு அடிப்படையாக இருந்தது. இந்த இயக்கத்தை பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த முகமது அலி ஜின்னா வழிநடத்தினார்.
இரு நாடு கோட்பாடு
இருப்பினும், இந்த இரு நாடு கோட்பாடு என்பது இந்தியா- பாகிஸ்தான் பகிர்ந்து கொள்ளும் பொதுவான வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் கருத்துக்கு முரணானது என்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் சிலர் கருதுகிறார்கள். இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் முனீர், இந்துக்களிடம் இருந்து தாங்கள் வேறுபட்டு இருப்பதால்... இரு நாட்டுக் கொள்கை சரி என்று நியாயப்படுத்தியிருக்கிறார்.
அவர் மேலும் பேசுகையில், "இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகள் தான்.. நாம் ஒரே நாடு இல்லை. அதனால்தான் இந்த நாட்டை உருவாக்க நமது முன்னோர்கள் போராடினர். இந்த நாட்டை உருவாக்க நம்முடைய முன்னோர்கள் நிறையத் தியாகம் செய்துள்ளனர். இந்த நாட்டை எப்படிப் பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, உங்களிடம் நான் மீண்டும் கேட்டுக் கொள்வது ஒன்றைத் தான். தயவு செய்து பாகிஸ்தானின் வரலாற்றை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு பாகிஸ்தான் நாட்டின் வரலாற்றைச் சொல்லுங்கள். பாகிஸ்தான் உடனான உங்கள் பிணைப்பு ஒருபோதும் பலவீனமடையக்கூடாது.. இந்த வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்ல மறக்காதீர்கள். அப்போது தான் அவர்களுக்கும் பாகிஸ்தானுடன் ஒரு வலுவான பிணைப்பு தோன்றும்" என்றார்.

இந்தியா முயன்றும் முடியவில்லை
ஜெனரல் முனீர் மேலும் பேசுகையில், "பலரும் பயங்கரவாத செயல்பாடுகள் இருப்பதால் பாகிஸ்தானுக்கு முதலீடு கிடைக்காது என்று அஞ்சுகிறார்கள். ஒரு நாட்டின் தலைவிதியைப் பயங்கரவாதிகள் பறித்துவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 13 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவம், அத்தனை வசதிகள் இருந்தும், அவர்களால் கூட நம்மை மிரட்ட முடியவில்லை.. அப்படியிருக்கும்போது இந்தப் பயங்கரவாதிகளால் என்ன செய்ய முடியும். இவர்களால் பாகிஸ்தான் ராணுவத்தை அழிக்க முடியும் என நினைக்கிறீர்களா" எனக் கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள பலுசிஸ்தானில் சில போராளிக் குழுக்கள் தங்களைத் தனி நாடாக அறிவிக்கக்கோரி ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்தப் பிராந்தியத்தில் வன்முறை அதிகரித்தே வருகிறது. இது குறித்துப் பேசும்போதே ஜெனரல் முனீர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், பலுசிஸ்தானில் பிரிவினைவாத இயக்கங்களை பாகிஸ்தான் ராணுவம் ஒடுக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
பலுசிஸ்தான் பயங்கரவாதம்
அவர் மேலும் கூறுகையில், "பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் பெருமை.. உங்களால் அதை அவ்வளவு சீக்கிரம் பறித்துவிட முடியுமா? அடுத்த 10 தலைமுறை முயன்றாலும் உங்களால் அது முடியாது. இந்தப் பயங்கரவாதிகளை மிக விரைவில் தோற்கடிப்போம். பாகிஸ்தான் வீழ்ந்துவிடாது" என்றார்.
அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய ஜெனரல் முனீர், "காஷ்மீர் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு முற்றிலும் தெளிவாக உள்ளது.. காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு போன்றது. அதுதான் இதயத்தையும் மூளையையும் இணைக்கும் நரம்பு. எனவே, அதை நாங்கள் மறக்க மாட்டோம். காஷ்மீரை விட்டுவிட மாட்டோம்" என்றார்.

இந்தியா பதிலடி
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருக்கும் சூழலில், ஜெனரல் முனீரின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானின் கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஜெனரல் முனீர் கருத்துகளைத் திட்டவட்டமாக நிராகரித்த இந்தியா, 1948 முதல் காஷ்மீரை ஆக்கிரமித்து வரும் பாகிஸ்தான் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசம். 1948ல் பாகிஸ்தான் காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அதுவே பாகிஸ்தானுடனான அதன் ஒரே உறவு.. அந்தச் சட்டவிரோத ஆக்கிரமிப்பையும் பாகிஸ்தான் உடனடியாகக் காலி செய்ய வேண்டும். நாட்டிற்குச் சொந்தமே இல்லாத ஒரு பகுதி எப்படி நாட்டின் கழுத்து நரம்பாக இருக்க முடியும்.
எவ்வளவு முயன்றாலும் பலன் தராது
பாகிஸ்தான் எவ்வளவு முயன்றாலும்... சர்வதேச அரங்கில் அதன் பெயர் மாறப்போவது இல்லை.. சர்வதேச பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருக்கிறது. அந்தப் பெயர் சீக்கிரம் மாறப்போவது இல்லை.. (மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட) ராணாவின் நாடுகடத்தல், மும்பை தாக்குதல்களில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதை பாகிஸ்தானுக்கு நினைவூட்டுகிறது. ஆனால், அந்தப் பயங்கரவாதிகளுக்கு அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்" எனச் சாடினார்.












Click it and Unblock the Notifications