நேசிக்கும் மனிதருடன் உடலுறவு வைத்துக் கொள்ள நான் ஏன் விரும்பவில்லை...?
மக்கள் தொகையில் 1-3% மக்கள் உடலுறவு கொள்வதில் விருப்பமற்றவர்களாக (asexual) இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாசியும் அவர்களில் ஒருவர்.
பல ஆண்டுகளாக அவருக்கு இதுகுறித்து குழப்பம் இருந்தது. நான் விரும்பும் மனிதருடன், கணவருடன் கூட படுக்கையை பகிர்ந்துக் கொள்ள விருப்பமற்றவளாக ஏன் இருக்கிறேன் என்ற குழப்பத்தில் இருந்தார்.
ஆனால், ஸ்டாசிக்கு அவரின் மருத்துவர் மூலம் அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கான விளக்கம் கிடைத்தது.
அந்த விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது இயல்பானது இல்லை என்று நினைத்தேன். பல நாட்களாக எனக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நம்பி வந்தேன்.
என்னுடைய நண்பர்கள் அவர்களுடைய ஆண் நண்பர்கள், அவர்கள் உடலுறவு கொள்ள விரும்பும் நட்சத்திரங்கள் குறித்து பேசுவார்கள். ஆனால், எனக்கு அவ்வாறான யோசனை எப்போதும் வந்ததில்லை.
என்னுடைய இருபது வயதில், ஏன் எனக்கு அவ்வாறான எண்ணங்கள் வருவதில்லை என்பதை கவனிக்க தொடங்கினேன். ஆனால், இது குறித்து நான் எவரிடமும் பேசவில்லை. என்னை அவர்கள் விசித்திரமானவர் என்று நினைத்து விடுவார்களோ என்ற எண்ணம்தான் இதுகுறித்து என் நண்பர்களுடன் பேசுவதிலிருந்து தடுத்தது.
பாலியல் ரீதியாக நான் ஈர்க்கப்படாவிட்டாலும் மற்றும் பாலியல் குறித்த சிந்தனைகள் வராமல் இருந்த போதிலும், எனக்கு காதல் குறித்த எண்ணம் வந்தது. ஆம், நான் காதல்வயப்பட்டேன்.
காதலும், பாலியல் ஈர்ப்பும்
இப்போது என் கணவராக இருக்கும், என்னுடைய தோழனை நான் என்னுடைய 19 வயதில் சந்தித்தேன். எனக்கு அப்போதெல்லாம் பாலியல் சிந்தனைகள் இல்லாமை என்றால் என்ன...? என்பது குறித்தெல்லாம் தெரியாது.
அவரை மிகவும் நேசிக்கத் தொடங்கினேன். "இந்த மனிதனை மிகவும் நேசிக்கிறேன். இவர் மட்டும் என்னிடம் காதலை சொன்னால், நான் நூறு சதவீதம் ஏற்றுக் கொள்வேன். என்னுடைய மீதமுள்ள வாழ்வை இவருடன் பகிர்ந்துக் கொள்ளும் போது, என்னுடைய படுக்கையை பகிர்ந்துக் கொள்ள மாட்டேனா என்ன...?" என்று யோசித்தேன்.
கணவன் மனைவியாக நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள ஒருவித பயணத்தை மேற்கொண்டோம். அவர் என்னிடம், "நான் உன்னை நேசிக்கிறேன். உனக்கு அந்த உணர்ச்சிகள் வரும் வரை காத்திருப்பேன். எவ்வளவு காலம் வேண்டுமானாலும்... நான் விரும்புவது நடக்காமல் போனால் கூட பரவாயில்லை, உனக்காக காத்திருப்பேன்" என்றார்.
ஆம் அவர் அப்படித்தான். அவர் எப்போதும் எனக்கு துணையாக இருந்திருக்கிறார். எனக்கு பிடிக்காததை நான் செய்ய அவர் என்றுமே என்னை வற்புறுத்தியதில்லை.
- 'முதலில் உடலுறவு கொண்டவை மீன்களே' - விஞ்ஞானிகள்
- ஐரோப்பாவில் 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகரிக்கும் எச்.ஐ.வி.
கணவன் - மனைவி உறவை முன்னோக்கி எடுத்துச் செல்ல உடலுறவு, குழந்தைகள் எல்லாம் நிச்சயமாக வேண்டும் என்று சமூக நெறிகள் வலியுறுத்தின.
என்னுடைய நண்பர்கள் திருமணம் செய்துக் கொண்டார்கள், குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள்."கடவுளே... எனக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. கணவருடன் படுக்கையை பகிர்ந்துக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று அப்போது நானும் நினைத்தேன். ஆனால், அப்போதும்கூட பாலியல் விருப்பங்கள் எனக்கு வரவில்லை.
என் கணவர் என்னை பிரிந்து, பாலியல் விருப்பங்கள் கொண்ட, அவருடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள தகுதியுடைய என்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு பெண்ணுடன் செல்வது போல ஒரு கொடுங்கனவு எனக்கு திரும்ப திரும்ப வரத் தொடங்கியது. என்னுடைய சொந்தக் கவலைகள், தாங்கிக் கொள்ளவே முடியாத ஒரு எல்லைக்கு என்னை இட்டுச் சென்றது.
"என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும். அதிலிருந்து வெளியே வரும் முயற்சியிலும் இறங்க வேண்டும்."என்று சிந்திக்க தொடங்கினேன்.
ஆனால், இதை சிந்திக்கும்போது எனக்கு 27 அல்லது 28 வயது ஆகி இருந்தது.
மூளைக்கட்டி
அப்போது நான் பெரும் பிழை செய்தேன். என்னுடைய பிரச்னைகளுக்கு என்ன காரணம், அதற்கு தீர்வு என்ன, நான் ஏன் பாலியல் உணர்வால் உந்தப்படாமல் இருக்கிறேன்? என்பதற்கான தீர்வை நான் இணையத்தில் தேடினேன்.
ஹார்மோன் விஷயங்களை எளிதில் சரிசெய்யக் கூடிய நிறைய குறிப்புகள் அதில் இருந்தன. ஆனால், எனது இணைய தேடலில் எனக்கு கிடைத்த ஒரு விஷயம் என்னை அதிர்ச்சி அடைய செய்தது. மூளைக்கட்டி கூட பாலியல் உணர்வு இல்லாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று நான் பார்த்த விஷயம் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது.
"என்ன நான் மூளைக்கட்டியால் இறந்து கொண்டிருக்கிறேனா...?"
நான் என் மருத்துவரை பார்க்க விரைந்தேன். அவரிடம், "இது என்ன தீவிரமான நோயா...? நான் இறக்கப் போகிறேனா...?" என்று அவரிடம் கேள்விகளை அடுக்கினேன்.
அவர் பொறுமையாக, "பதற்றப்படாதீர்கள். இது பெரும் நோயெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் பாலியல் விருப்பமற்றவர் (asexual) அவ்வளவுதான்" என்றார்.
நான் இதற்கு முன் இது குறித்து கேள்விபட்டதில்லை என்பதால், அவரிடம் கேள்விகளை அடுக்கினேன்.
அவர் எனக்கு சில இணையதளங்களை பரிந்துரைத்தார். அதில் என்னைப் போல உள்ள, அதாவது என்னைப் போல புணர்ச்சியில் விருப்பமற்ற பல நபர்களை கண்டடைந்தேன். எனக்கு வியப்பாக இருந்தது.
அதன் பின் இதுகுறித்து மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டேன். அதன்பின் நான் கொஞ்சம் ஆறுதலாக உணரத் தொடங்கினேன். இதுகுறித்து என் கணவரிடமும் பேசினேன். அவர் என்னைப் புரிந்து கொண்டார்.
பாலியல் உணர்வு இல்லாமை
பாலியல் உணர்வு இல்லாமல் என்பது பரவலான ஒன்றுதான். இந்த உணர்வு இல்லாமல் பலர் இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் நம்பிக்கையான உறவை ஏற்படுத்தி, அவர்கள் உடலுறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு எப்போது ஆணிடம் நெருக்கமாக சென்றாலும், "வேண்டாம்... உடனே நிறுத்து" என்ற உணர்வுதான் மேலோங்கும். .
நான் இதுகுறித்து எப்போதாவது பேசும் போது, உடனே அவர்கள், "இறைவா... பின் எப்படி பிள்ளை பெற்றுக் கொள்வாய் என்பார்கள்?"
ஆனால், எனக்கு குழந்தை வேண்டுமென்று நான் விருப்பப்பட்டால்,பெற்றுக் கொள்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது.
எனக்கு கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாகதான் பாலியல் சிந்தனை இல்லாமை குறித்து தெரியும். நான் ACE (asexual என்ற பதத்தின் சுருக்கம்) என்று அறியப்படுவதை விரும்புகிறேன்.
உண்மையில் ACE- ஆக இருப்பதை கொண்டாடுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். நான் அதுகுறித்துப் பேச விரும்புகிறேன்.
ஏனெனில், என்னுடைய உரையாடல் பலருக்கு இதுகுறித்து புரிந்து கொள்ள உதவும். எனக்கு மட்டும் என் 18 அல்லது 19 வயதில் இதுகுறித்து தெரிந்திருந்தால், என்னுடைய இருபதுகளில் என்னுடைய மனநிலை நன்றாக இருந்திருக்கும்.
பிற செய்திகள் :
- வாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே நீடித்த பகைமையின் பின்னணி என்ன?
- இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?
- மோதி குறித்தும், விருதை திருப்பித் தருவது குறித்தும் பிரகாஷ் ராஜ் என்ன சொன்னார்?
- காஷ்மீர்: இந்திய ராணுவ முகாம் மீது தற்கொலைதாரிகள் தாக்குதல்