ஒரே வியப்பு.. உலககோப்பை போட்டியில் சார்ஜ் ஏற்றப்படும் கால்பந்துகள்.. அட காரணத்த பாருங்க.. சூப்பரே!
தோஹா: உலககோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்படும் பந்துகள் பயன்படுத்துவதற்கு முன்பு சார்ஜ் செய்யப்படும் சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. இது ஏன்? எதற்காக பந்து சார்ஜ் செய்யப்படுகிறது? என்பது பற்றிய தகவல் அனைவரையும் வியக்க வைக்கிறது.
உலகில் அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டாக கால்பந்து உள்ளது. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் கால்பந்துக்கு ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக ரசிகர்களை கால்பந்து போட்டி கொண்டுள்ளது.
இந்நிலையில் தான் அனைவரும் எதிர்பார்த்த 22வது உலககோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கியது. இந்த போட்டிகள் டிசம்பர் 18 ம் தேதி வரை நடைபெற உள்ளன.
ஒரே ஒரு போட்டோ.. மெஸ்ஸிக்கே சவால் விட்ட சசிதரூர்.. உலககோப்பை கால்பந்து போட்டிக்கு நடுவே கலகல
நாக்அவுட் சுற்றுகள்
இந்த உலககோப்பை போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்றன. இந்த நாடுகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் பங்கேற்றன. இதில் வென்ற அணிகள் தற்போது நாக் அவுட் சுற்றில் மோதி வருகின்றன. இந்த நாக்அவுட் சுற்றுகள் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளன. அதன்பிறகு காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் தற்போது உலககோப்பை கால்பந்து போட்டி முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.
பாகிஸ்தான் பந்துகள்
இந்நிலையில் தான் உலககோப்பை கால்பந்து போட்டி தொடர்பாக பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் உலககோப்பை போட்டியில் பயன்படுத்தப்படும் பந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியில் இருந்து கத்தார் உலககோப்பை கால்பந்து போட்டிக்காக அடிடாஸ் நிறுவனம் கால்பந்துகளை வாங்கி பயன்படுத்தி வருகிறது.
‛அல் ரிஹ்லா’ என பெயர்
இங்கு தயாரிக்கப்படும் பந்துகள் தரமானதாக உள்ளன. இதனால் தான் உலககோப்பை கால்பந்து போட்டிக்கும் இங்கிருந்து பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் உள்ள கால்பந்து உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் டாலர்களை பாகிஸ்தான் ஈட்டி வருகிறது. ஆசியாவில் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா என கால்பந்து விளையாட்டை விரும்பி விளையாடும் பகுதிகளில் பெரும்பாலும் இங்கு தயாரிக்கப்படும் பந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சியால்கோட் கால்பந்துகள் மிகவும் புகழ் பெற்றதாகும்.தற்போது உலககோப்பையில் பயன்படுத்தப்படும் பந்து ‛அல் ரிஹ்லா'(Al Rihla) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதற்கு அரபு மொழியில் பயணம்(Journey)என பொருள்படும்.
சார்ஜ் ஏற்றப்படும் பந்துகள்
இந்நிலையில் தான் உலகக் கோப்பைக்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கால்பந்து பற்றிய இன்னொரு சுவாரசியமான விஷயம் வெளியாகி உள்ளது. உலககோப்பை போட்டியில் பயன்படுத்தப்படும் பந்துகள் சார்ஜ் செய்யப்படுகின்றன. இதுதொடர்பான படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. பொதுவாக பந்துகளில் காற்று தானே அடைக்கப்படும். ஆனால் கத்தார் உலககோப்பை கால்பந்துகள் ஏன் போட்டிக்கு முன்பு செல்போன்கள் போன்று சார்ஜ் ஏற்றப்படுகிறது? என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.
வேகம்-திசையை கண்காணிக்க சென்சார்
இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி, உலககோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தின் உள்ளே சென்சார் ஒன்று உள்ளது. கால்பந்து செல்லும் திசை, வேகம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில் இந்த சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் பேட்டரி மூலம் இயங்குவதால் தான் கால்பந்துக்கு போட்டிக்கு முன்பு சார்ஜ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு சார்ஜ் செய்வதன் மூலம் சென்சார் இயங்கி பந்தின் வேகம், திசையை கண்காணிக்கவும், பந்து எந்த இடத்தில் இருந்தது என்பதை துல்லியமாக காண முடியும்.
வார் நடுவர்களுக்கு உதவி
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் வீடியோ அசிஸ்டென்ட் நடுவர்களுக்கு (வார், அல்லது Video Assistant Referee OR VAR )பெரிதும் கைக்கொடுத்து வருகிறது. முன்னதாக குரூப் எச் பிரிவில் நடந்த லீக் போட்டியில் போர்ச்சுக்கல் மற்றும் உருகுவே அணிகளுக்கான போட்டியின்போது இந்த தொழில்நுட்பம் கைக்கொடுத்தது. உருகுவேக்கு எதிராக போர்ச்சுக்கல் அடித்த கோல் சந்தேகத்தை கிளப்பியது. அதாவது புருனோ பெர்னாண்டஸ் அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரில் கோல் அடித்தது யார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதற்கு இந்த தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணப்பட்டது. அப்போது புருனோ பெர்னாண்டஸ் தான் கோல் அடித்ததும், பந்து ரொனால்டோ மீது படமால் இருந்ததும் தெரியவந்தது.
6 மணிநேரம் தாக்குப்பிடிக்கும் சார்ஜ்
இந்த நிகழ்வை தொடர்ந்து தான் கால்பந்தில் சென்சார் பயன்படுத்துவதும், பந்து சார்ஜ் ஏற்றப்படுவதும் தெரியவந்தது. இந்த சென்சார் வெறும் 14 கிராம் மட்டுமே உள்ளது. இந்த சென்சார்கள் KINEXON நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. கால்பந்தில் உள்ள பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அது விளையாட்டின்போது 6 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும். பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தாவிட்டால் 18 மணிநேரம் வரை பேட்டரியில் சார்ஜ் நீடிக்கும். உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக போட்டியில் பயன்படுத்தப்படும் பந்துகளில் சென்சார்கள் இருக்கும் என்று FIFA மற்றும் அடிடாஸ் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அது மேற்கூறிய வகையில் பயன்படுத்தப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.