ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. ஈரான் திடீரென ஹார்முஸை திறந்தது ஏன்? பின்னால் உள்ள உலக அரசியல்
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் கடந்த சில வாரங்களாக உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த 'ஹார்முஸ் ஜலசந்தி' விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் திடீரென இதுபோல நிலைப்பாட்டை மாற்ற என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
ஈரான் - அமெரிக்கா இடையிலான நேரடி மோதல் கடந்த ஒரு மாதமாக நடந்தது. போர், முற்றுகை, எச்சரிக்கை என உலக நாடுகளை இந்த மோதல் அச்சுறுத்தி வந்தது. இதன் காரணமாகச் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த மோதல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்தைப் பெரிதும் பாதித்தது.

ஹார்முஸ்
உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாக ஹார்முஸ் கருதப்படும் நிலையில், அது முடங்கியது அழுத்தத்தை அதிகரித்தது. இந்தியா உட்பட ஆசிய நாடுகள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா ஈரான் இடையே இந்த விவகாரத்தில் 15 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அப்போது ஹார்முஸை சர்வதேச கப்பல்களுக்குத் திறந்துவிடுவதாக ஈரான் அறிவித்தது.
ஆனால், இந்த நல்ல செய்தி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.. அப்போது லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஆத்திரமடைந்த ஈரான், உலக நாடுகளின் எரிசக்தி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது. இதனால் மீண்டும் சப்ளை செயின் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு நடுவே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படாத ஈரான் மீது அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என்று ட்ரம்ப் அறிவித்தது தனிக்கதை. இது சீனாவைப் போன்ற நாடுகளுக்குப் பெரும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியது.
முடிவை மாற்றிய ஈரான்
கடந்த சில நாட்களாகவே ஹார்முஸை சுற்றிலும் இதுபோல ஏக குழப்பங்கள் நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இது இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு நல்ல செய்தியாகவே இருக்கும். திறக்கவே மாட்டேன் எனச் சொல்லி வந்த ஹார்முஸை ஈரான் திடீரென திறந்தது ஏன் என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது எட்டப்பட்டுள்ள போர் நிறுத்தம் காரணமாகவே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன
இது குறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், "லெபனான் போர் நிறுத்தத்தை முன்னிட்டு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் செல்ல முழு அனுமதி வழங்கப்படுகிறது. ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதையில், போர் நிறுத்தக் காலம் முடியும் வரை இந்தப் போக்குவரத்து தடையின்றித் தொடரும்" என்றார்.
ட்விஸ்ட் கொடுக்கும் டிரம்ப்
ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். அதே நேரத்தில், தனது பிடிவாதமான நிலைப்பாட்டில் அவர் பின்வாங்கவில்லை. அதாவது ஈரானை அமெரிக்கப் போர்க் கப்பல்கள் முடக்கியுள்ள சூழலில், அது தொடரும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "ஹார்முஸ் ஜலசந்தி வணிகத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டிருப்பதை அங்கீகரிக்கிறோம். ஆனால், ஈரானுடனான எங்களது ஒப்பந்தங்கள் 100% முடியும் வரை, அந்த நாட்டுக்கு எதிரான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும். இந்த பேச்சுவார்த்தையில் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டதால், இது மிக விரைவாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஈரான் கதவுகளைத் திறந்தாலும், ட்ரம்ப் தனது முற்றுகையை விலக்க மறுப்பது ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. லெபனான் போர் நிறுத்தம் உலகிற்கு ஒரு இடைவெளியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், ட்ரம்ப்பின் திட்டம் முழுமையடையும் வரை மத்திய கிழக்கில் முழுமையான அமைதி திரும்புமா என்பது சந்தேகமே.














Click it and Unblock the Notifications