காசாவை இரண்டாக பிளந்த இஸ்ரேல், ஏன்? அவர்களின் பகீர் பிளான் தெரியுமா.. இடையில் இந்த அமெரிக்கா வேற
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தம் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்துள்ள நிலையில், காசா நகரை இப்போது இஸ்ரேல் இரண்டாகப் பிளந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் கடந்த அக். 7ஆம் தேதி முதலில் தாக்குதல் நடத்திய நிலையில், பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய இஸ்ரேல், காசா மீது சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பல வாரங்களாகவே பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் காசா மோதல்: இதற்கிடையே இஸ்ரேல் வீரர்கள் இப்போது காசாவை இரண்டாகப் பிளந்துள்ளனர். வடக்கு காசா, தெற்கு காசா என இரண்டாகப் பிரித்துவிட்டனர். இதனால் அப்பகுதியில், தகவல் தொடர்பும் முடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி யுத்தம் ஆரம்பித்த பிறகு அங்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். காசா மீது முழு வீச்சில் தாக்குதலை நடத்தவே இந்தத் திட்டத்தை இஸ்ரேல் கையில் எடுத்துள்ளது,
இப்போது காசா வடக்கு மற்றும் காசா தெற்கு என்று இரண்டாக இஸ்ரேல் பிரித்துள்ளதை அந்நாட்டின் தலைமை இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி உறுதி செய்துள்ளார். மேலும், இப்போது காசா நகரத்தையும் இஸ்ரேல் ராணுவம் முழுமையாகச் சுற்றி வளைத்துள்ளது.
முடக்கம்: காசாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் சாலையை இஸ்ரேல் ராணுவம் முடக்கியுள்ளது. அங்கே தனது பீரங்கிகளை நிறுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம், வடக்கு காசாவில் இருந்து எந்தவொரு வாகனத்தையும் தெற்கு நோக்கிச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
காசாவின் வடக்கு பகுதியில் தான் ஹமாஸ் ராணுவத்தின் முக்கிய தளபதிகள் இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது. இதன் காரணமாகவே வடக்கு மற்றும் தெற்கு காசாவை இஸ்ரேல் பிரித்துள்ளது. அடுத்து வடக்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்த உள்ளது. படையெடுப்பை ஆரம்பித்தாலும் கூட வடக்கு காசாவை சுற்றியே இஸ்ரேல் தனது தாக்குதல் வியூகங்களை அமைக்கும் எனக் கூறப்படுகிறது.
சிக்கல்: ஏற்கனவே, இதன் காரணமாகத் தான் வடக்கு காசாவில் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக தெற்கு காசாவுக்கு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பல லட்சம் பேர் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிவிட்டனர். இருப்பினும், இன்னுமே கூட அங்கு மக்கள் இருக்கும் நிலையில், அவர்களின் நிலை தான் இப்போது சிக்கலானதாக மாறியிருக்கிறது.
ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் 4,100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 2,640 பெண்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அகதிகள் முகாமில் தாக்குதல்: முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய காசாவில் உள்ள இரண்டு அகதிகள் முகாம்களை இஸ்ரேல் தக்கிய நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மனிதாபிமான உதவிகளைப் பெற இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறவிக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இதை இஸ்ரேல் ஏற்க மறுத்தே வருகிறது.

அதிகபட்சம் ஓரிரு மணி நேரம் மட்டுமே பிணையக் கைதிகள் பாதுகாப்பாக வெளியே வரப் போர் நிறுத்தத்தை அறிவிக்க முடியும் என்றும் அதுவும் இப்போதே அமலில் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது., போர் தொடரும் நிலையில், கடந்த சில நாட்களாகக் காசா எல்லையில் உள்ள ரஃபா கிராசிங் வழியாக இதுவரை சுமார் 1,100 பேர் எகிப்து நாட்டிற்குச் சென்றுள்ளனர்.
அமெரிக்கா: இந்த யுத்தம் சீக்கிரம் முடிய வேண்டும்.. இல்லையென்றால் இப்போது இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் சண்டை அந்த பிராந்தியம் முழுக்க பரவும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. இதன் காரணமாகவே இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இப்போது மீண்டும் துருக்கி நாட்டிற்கு வந்துள்ளார். அதேபோல சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ் மேற்கு ஆசியாவில் ஏதோ ஒரு நாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிளிங்கன் ஏற்கனவே இந்த விவகாரத்தில் இஸ்ரேல், ஜோர்டான், வெஸ்ட் பேங்க், சைப்ரஸ் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications