சரமாரியாக பொழிந்த குண்டு மழை.. அயன்டோம் இருந்தும் தடுக்க முடியாமல் தவித்த இஸ்ரேல்!
டெல் அவிவ்: பாலஸ்தீனம் தாக்குதல், ஹமாஸ் தலைவர் படுகொலை, லெபனான் மீது தாக்குதல் என எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து ஈரான் தனது கணக்கை தற்போது தீர்க்க தொடங்கியது. இஸ்ரேலின் பல முக்கிய இடங்களை நேற்றிரவு, ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. 'அயன் டோம்' எனும் தடுப்பு வசதி இருந்தும் இந்த தாக்குதலை இஸ்ரேலால் முழுமையாக தடுக்க முடியாமல் போயுள்ளது.
பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரமடைந்தது. இந்த 362 நாட்களில் இஸ்ரேல் காசா மீது ருத்ர தாண்டவம் ஆடிவிட்டது. ஹமாஸை ஒழிக்கிறோம் என்று கூறி நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் இஸ்ரேல் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும், இஸ்ரேல் தனது செயல்பாடுகளை நிறுத்தவில்லை.

ஹமாஸுக்கு, லெபனானில் இருந்து இயக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு உதவி வந்த நிலையில், இதனை பழிவாங்க லெபனான் மீது கண்மூடித்தனமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2,000 அதிகமானோர் லெபனானில் படுகாயமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதிலிருந்து ஹிஸ்புல்லா மீண்டு வருவதற்குள் மற்றொரு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
இதில் ஹிஸ்புல்லா தலைவர், இரண்டாம் கட்ட தளபதிகள் என முக்கிய தலைகள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாவை மொத்தமாக முடிக்கும் நேரம் வந்துவிட்டது என கூறிய இஸ்ரேல், லெபனான் மீது தரைவழியாக ஊடுருவ போவதாக அறிவித்தது.
இந்த நிலையில்தான் ஈரான் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. கடந்த ஓராண்டாக அமைதியாக இருந்த ஈரான் தற்போது இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை தொடங்கியிருக்கிறது. நேற்றிரவு மட்டும் நூற்றுக்கணக்கான ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் பல இடங்களை பதம் பார்த்திருக்கிறது. விமான ஓடுதளம், ராணுவ தளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணைகள் விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இதில் விஷயம் என்னவெனில், இஸ்ரேல் வசம் ஏவுகணை தாக்குதலை தடுக்க ஐயன் டோம் எனப்படும் பாதுகாப்பு அம்சம் இருக்கிறது. ஆனாலும், இதை மீறி ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியுள்ளன. ஐயன் டோம் என்படுவது, சிறிய வகை ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை வானத்திலேயே இடைமறித்து தாக்கும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். ஆனால் இதற்கு ஒரு லிமிட் இருக்கிறது. அதாவது வேகமாக வரும் ஏவுகணைகளை இதனால் இடை நிறுத்த முடியாது.
சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தில் (மணிக்கு 1,235 கி.மீ) பயணிக்கும். இதை இடைமறிப்பது அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் இஸ்ரேலின் அயன்டோம் சில சூப்பர் சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டிருக்கிறது. ஆனால், ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இதனால் எதுவும் செய்ய முடியாது.
ஹைப்பர் சோனிக் என்பது ஒலியை விட 5 மடங்கு வேகத்தில், அதாவது மணிக்கு 6,174 கி.மீ வேகத்தில் தாக்கக்கூடியதாகும். அயன்டோம் இதை தடுக்காது. இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையைதான் நேற்று ஈரான் இஸ்ரேல் மீது பயன்படுத்தியிருக்கிறது. எனவேதான் இஸ்ரேலால் இதை தடுக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications