பெண்கள் பர்தா அணிய வேண்டிய கட்டாயமில்லை.. சவுதியின் முதன்மை மதபோதகர் புதிய கருத்து!
பெண்கள் பர்தா அணிய வேண்டிய கட்டாயமில்லை என சவுதியின் முதன்மை மதபோதகர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரியாத்: சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பரில் அங்கு இருக்கும் பெண்கள் கார் ஓட்ட லைசென்ஸ் பெறலாம் என்று கூறினார்.
அதன்பின் முதல்முறையாக சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது சவுதியின் முதல் தியேட்டர் ஆகும்.
பல்வேறு பணமுதலைகள் மீதும் நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் அந்நாட்டின் முதன்மை இஸ்லாமிய மதபோதகர் ஷேக் அப்துல்லா அல் முட்லாக் பர்தா அணிவது அவசியமில்லை என்றுள்ளார்.
அவசியம் கிடையாது
ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கருத்துப்படி ''சவுதியில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை. எளிமையான உடை அணிந்தால் போதும். கலாச்சாரத்தை சீர்குலைக்காத உடையே போதும்'' என்றார்.
எல்லா நாடுகள்
மேலும் ''உலகில் இஸ்லாத்தை பின்பற்றும் பல நாடுகள் இருக்கிறது. பல கோடி இஸ்லாமிய பெண்கள் இருக்கிறார்கள். இதில் 90 சதவிகிதம் பேர் இப்படி இறுக்கமாக பர்தா அணிவதில்லை. அப்படி இருக்கும் போது நாம் மட்டும் இப்படி எல்லாம் கட்டுப்பாடு விதிக்க முடியாது'' என்றுள்ளார்.
சட்டம் இருக்கிறது
பெண்கள் பர்தா அணியாமல் இருப்பது அங்கு பெரிய தவறு. சவுதி சட்டத்தில் இதற்கு பெரிய தண்டனை இருக்கிறது. இந்த நிலையில் அங்கு இருக்கும் பெரிய மதபோதகர் ஒருவர் இப்படி கூறியது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரிய
தற்போது இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த கருத்து விரைவில் சட்டமாக மாற்றப்படவும் வாய்ப்பு உள்ளது. ஆமாம் சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் இதை சட்டமாக மாற்ற வழி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.