ஈரான் மீது தாக்குதல்! 'பேரழிவை ஏற்படுத்தும் அபாயம்..' அமெரிக்காவை விமர்சித்த ஐ.நா!
தெஹ்ரான்: இன்று அதிகாலையில் ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் விமர்சித்திருக்கிறார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்று கூறி, அந்நாட்டின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என்கிற மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா இன்று நேரடியாக தாக்குதலை நடத்தியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்வினை
அமெரிக்காவின் தாக்குதல்களை சீனா கண்டித்துள்ளது. அமெரிக்கா தனது பழைய தவறுகளை மீண்டும் செய்வதாக எச்சரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் போரில், அமெரிக்கா நேரடியாக இராணுவ ரீதியாக ஈடுபட்டிருப்பது இதுவே முதல் முறை. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இதனையடுத்து இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.
டிரம்ப் இந்த நடவடிக்கையை 'அற்புதமான வெற்றி; எனக் கூறினார். ஆனால் அணு உலைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மேலோட்டமானவைதான் என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரான்
மட்டுமல்லாது அமெரிக்காவின் தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ள ஈரான், இதன் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. "இது நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த தாக்குதல் சட்டவிரோதமானவை" என்று, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "ஐ.நா சாசனம் மற்றும் தற்காப்புக்கான ஏற்பாடுகளின் அடிப்படையில், ஈரான் தனது மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் உரிமையை கொண்டுள்ளது" என்றும் கூறியுள்ளார். அதாவது ஈரான் பதில் தாக்குதலை நடத்த தயங்காது என்பதுதான் இதன் அர்த்தம்.
சீனா
"இரு நாடுகளுக்கு இடையேயான போரில் மூன்றாவதாக ஒரு நாடு நுழைந்திருப்பது ஆபத்தான திருப்புமுனை" என சீனாவும் அமெரிக்காவின் தாக்குதல்களை கண்டித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு ஈராக் போரை மேற்கோள்காட்டி, மத்திய கிழக்கில் இராணுவ தலையீடுகள் நீண்டகால பிரச்சினைகளை உருவாக்கும் என்றும், பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், இந்த தாக்குதலால் கடுமையான கவலை ஏற்பட்டதாகவும், இது பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார். 'ராணுவம் மூலம் தீர்வு இல்லை; பேச்சுவார்த்தையே ஒரே வழி' என்று அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் நடவடிக்கையை பாராட்டினார். "இந்த தாக்குதல்கள் வரலாற்றை மாற்றும்" என்று அவர் கூறினார். மேலும், இஸ்ரேலின் நீண்டகால உறுதிமொழியை நிறைவேற்றியதற்கு அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.
ஹமாஸ்
பாலஸ்தீன குழு ஹமாஸ், இந்த தாக்குதல்களை கடுமையாக கண்டித்திருக்கிறது. இது ஈரானின் இறையாண்மைக்கு எதிரான ஆக்கிரமிப்பு. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் இது என்றும் விமர்சித்திருக்கிறது.
பிரிட்டன்
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். "அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க முடியாது. மத்திய கிழக்கில் அமைதி அவசியம்" என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க எதிர்க்கட்சி
அமெரிக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள், டிரம்ப்பின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என விமர்சித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், இதை அங்கீகரிக்கப்படாத மற்றும் ஆபத்தான நடவடிக்கை எனக் குற்றம்சாட்டியுள்ளார். "டிரம்ப் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
மற்ற நாடுகள்
நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், அமைதியை முன்னிலைப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பேச்சுவார்த்தையே நீண்டகால தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதேபோல ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, அமெரிக்க தாக்குதல்களின் விளைவுகளை மதிப்பீடு செய்ய உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியுள்ளார். தென் கொரியா, அமெரிக்காவின் நடவடிக்கையின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு விளைவுகளை மதிப்பீடு செய்ய அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது. இவையெல்லாம் அமெரிக்க ஆதரவு நாடுகள் என்பதால், பெரியதாக எதிர்ப்புகளை தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications