"எங்க ஆளுங்க மேலேயே கை வைப்பீங்களா?".. கோபப்பட்ட சீன அதிபர்.. பம்மிய பாகிஸ்தான் பிரதமர்
பெய்ஜிங்: பாகிஸ்தானில் சீன பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிடம் கோபமாக கேள்வியெழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதி அளித்துள்ளார்.
மேலும், சீன பணியாளர்களை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்தும் ஜி ஜின்பிங்கிடம் ஷபாஸ் ஷெரீப் விளக்கியதாக கூறப்படுகிறது.

சீனா விரிக்கும் 'ஆக்டோபஸ்' கை..
சீனா தன்னை சுற்றி இருக்கும் அண்டை நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு இரண்டு உத்திகளை அந்நாடு கையாள்கிறது. ஒன்று, ஒரு நாட்டுக்கு அளவுக்கு அதிகமாக கடன் கொடுக்கும் உத்தி. இதனால் கடன் பெற்ற நாடுகள் அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்க இயலாத போது, தனது ஆதிக்கத்தை அந்நாட்டின் மீது சீனா செலுத்தத் தொடங்கும். உதாரணம் இலங்கை. இரண்டாவது, ஒரு நாட்டில் பொருளாதாரத் திட்டங்களை இலவசமாக செய்து தருகிறேன் என்ற பெயரில் அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவது. இந்த இரண்டாவது உத்தியைதான் பாகிஸ்தானில் சீனா கையாண்டு வருகிறது.

பிரம்மாண்ட பொருளாதார வழித்தடம்
பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு பிரம்மாண்ட பொருளாதார வழித்தடம் அமைக்கும் பணியை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. ரூ.4.37 லட்சம் செலவில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது இந்திய எல்லையை ஒட்டி செல்வதால் இந்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், சீனா இதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், இந்த பொருளாதார வழித்தடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சீன பணியாளர்கள் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

சீனப் பணியாளர்கள் மீது தாக்குதல்
எனவே சீனப் பணியாளர்கள் தங்குவதற்காக பாகிஸ்தான் பல வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் சொந்த நாட்டு மக்களையே அப்புறப்படுத்தி சீனப் பணியாளர்களுக்கு தங்குமிடங்களை பாகிஸ்தான் அரசு செய்து வருகிறது. இது, சீனப் பணியாளர்கள் மீது பாகிஸ்தானியர்களுக்கு ஒருவித எரிச்சலையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது. இதனால் பல இடங்களில் சீன பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சில தீவிரவாத அமைப்புகளும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதில் சீனப் பணியாளர்கள் உயிரிழந்தும் வருகிறார்கள்.

ஜி ஜின்பிங் கோபம்.. ஆடிப்போன ஷெரீப்..
இந்நிலையில், தங்கள் நாட்டுப் பணியாளர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம் சீன அரசு பல முறை அறிவுறுத்தியது. ஆனால், ஒப்புக்காக மட்டும் சில நடவடிக்கைகை பாகிஸ்தான் எடுத்ததாக தெரிகிறது. இதனால் சீன பணியாளர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி உள்ளது. இந்த சூழலில்தான், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற அவர், அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது, சீனப் பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறித்து ஜி ஜின்பிங் கோபமாக கேள்வியெழுப்பியதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஷபாஸ் ஷெரீப், இனி இதுபோல நடக்காது என உறுதியளித்திருக்கிறார். மேலும், சீனப் பணியாளர்களை பாதுகாக்க எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போகிறோம் என்பது குறித்தும் அவர் ஜி ஜின்பிங்கிடம் விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.











Click it and Unblock the Notifications