அரிசி மானிய முறைகேடு: தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் அரசுப் பதவி வகிக்க தடை
பாங்காக்: அரிசி மானியத்தில் முறைகேடு செய்த தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினாவத்ர அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசு பொறுப்புகளை ஏற்கக் கூடாது என ராணுவத்தால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினாவத்ர. இவர் மீது அரிசி மானியத் திட்டத்தை மோசமாக கையாண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. விவசாயிகள் பலர் ஆதரவு தெரிவிக்க, நெல் விவசாயிகளுக்கு மானியம் தருவதாகக் கூறி, நூறு கோடி டாலர்கள் அளவிலான அரசாங்கப் பணத்தை ஷினாவத்ர விரயம் செய்ததாக அவர்கள் கூறினர்.

இப்புகார் தொடர்பாக அந்நாட்டின் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றம் நடத்திய விசாரணையில் ஷினாவத்ர மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசு பொறுப்புகளை விதிக்க கூடாது என நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.
அரிசி மானியத் திட்டத்தை பொறுப்பில்லாமல் கையாண்டார் என குற்றவியல் சட்டத்தின் கீழும் ஷினாவத்ர மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதுவும் நிரூபிக்கப் படும் பட்சத்தில் ஷினாவத்ரவுக்கு பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழல், சட்டத்தின் மாட்சிமை போன்ற விஷயங்கள் பற்றியது என்பதைத் தாண்டி, ஷினாவத்ர குடும்பத்தை அரசியலில் இருந்து விரட்டுவது பற்றியது இந்த வழக்கு என அந்நாட்டு மக்கள் கருதுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications