உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்.ராஜா பகீர் கருத்து!
காஞ்சிபுரம்: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எச்.ராஜா. அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சராக அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறதே என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எச்.ராஜா, “உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினால் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது. கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என சனதான தர்மம் கூறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரியில் தனியார் பள்ளி வைத்துள்ளதால் மாணவர்களிடம் பள்ளி கட்டணமாக வாங்க முடியாது என்பதால் சாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார். ஆகையால் தான் சனாதானத்தை கொசு டெங்கு போன்றவை அழிக்க வேண்டும் எனப் பேசி வருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய எச்.ராஜா, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திருவேங்கடத்தை கொலை செய்தது? ஜெயிலிலில் இருந்து வெளியே வந்த நபரிடம் எப்படி ஆயுதம் வந்தது? ஜெயிலில் இருந்து எப்படி அதிகாலை 5 மணிக்கு குற்றவாளி கொண்டு வரப்பட்டார்? உள்ளிட்ட பல்வேறு சந்தேகம் எழுந்து வருவதால் இது திட்டமிட்டபடி 100 சதவீத கொலைதான்.
இதில் ஆளும் கட்சியினர் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் வருவதால் ஆரம்பகட்ட காலத்திலிருந்து எதிர்கட்சிகள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.” எனப் பேசி இருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் பாஜகவினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உதயநிதிக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அமைச்சர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்றும் பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தான் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.












Click it and Unblock the Notifications