தமிழகத்தை Heaven போல மாற்ற.. மக்கள் நீதி மய்யம் முன் வைக்கும் Seven திட்டங்கள்.. அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரம்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆட்சி முறை மற்றும் பொருளாதாரத் புத்தெழுச்சிக்கான 7 செயல் திட்டங்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கமல்ஹாசன் சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அவர் தமிழகத்தின் பொருளியலைச் சீரமைத்து டிரில்லியன் எக்கனாமி எனும் இலக்கை நோக்கிய கட்சியின் செயல்திட்டத்தை அறிவித்தார்.
நல்லாட்சி மற்றும் பொருளாதாரத்தை சீரமைக்கும் 7 செயல்திட்டங்கள் பின்வருமாறு:
1. நேர்மையான துரித நிர்வாகம்
உலகத் தரம் வாய்ந்த ஒரு அரச நிர்வாகத்தினை தமிழகமும் தமிழக மக்களும் பெற்றிடும் வகையில் முதல் திட்டமாக, கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை காகிதங்களற்ற அலுவலகங்கள் என்கின்ற எங்களின் முக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.
காகிதக் கோப்புகளை தடை செய்து அதனால் ஏற்படும் தாமதங்களை நீக்கி, இணையவழியில் நேர்மையான வெளிப்படையான துரிதமான அரசு அமைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவோம்.
இணையவெளியில் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தேவையான அனைத்துப் பாதுகாப்புகளையும் உரிமைகளையும் பெறும் வகையில் எங்களது அரசாங்கம் நடைபெறும்.
அரசின் அனைத்துத் திட்டங்களையும் ( சேவை உரிமைச் சட்டம்) மக்கள் பெற்றுப் பயனுறும் வகையிலும், முன் கூட்டியே கணிக்கும் வகையிலான திட்டங்களையும் எங்கள் அரசு அமைத்திடும். அரசு சார்ந்து மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆணைகளையும் அனுமதிகளையும் அவர்களின் கைத்தொலைபேசியிலேயே கிடைத்திடும் வண்ணம் எங்களது இணையவழி அரசு இயங்கும்.
2. மின்னணு இல்லங்கள்
இணையத் தொடர்பு என்பது மக்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும். இது வரை இல்லாத அளவில் ஒரு அரசின் மிகப்பெரும் முதலீடாக இது அமையும்.
3. நவீன தற்சார்பு கிராமங்கள்
கிராமப்புறங்களில் இருக்கும் மனித வள ஆற்றலை சரியாகப் பயன்படுத்தும் வகையில் தொழில் முனைவோர்களையும், தொழில் நிறுவனங்களையும் நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் தங்கள் கிளை அலுவலகங்களை அமைக்கும்படி எங்கள் அரசு வலியுறுத்தும்.
இந்தியாவின் இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக தொழிற்புரட்சி பொருளாதாரம் அமைய எங்கள் அரசு முனையும். எங்கள் இளைஞர்கள் வேலை கேட்பவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக எங்கள் அரசு மாற்றும்.
4. பெண் சக்தி
பாரதியாரின் புதுமைப் பெண் என்கின்ற கனவு மெய்ப்பட, அவர்களின் கல்வி வேலைவாய்ப்பு, தொழில் முனையும் ஆற்றல் என்று அனைத்து வகையிலும் பெண்கள் முன்னேறிட எங்கள் அரசு செயல் திட்டங்கள் வகுக்கும். இல்லத்தரசிகளுக்கு அவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் செய்யும் வேலைக்கும் சரியான ஊதியம் வழங்கப்படும்.
5. பசுமைப் புரட்சி ப்ளஸ்
விவசாயத் தொழில் என்பதை வெறும் வார்த்தையாக இல்லாமல் அது உண்மையிலே வருமானமும், லாபமும் உள்ள ஒரு நேர்மையான வணிகமாக மாற்றுவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் எங்கள் அரசால் செய்து தரப்படும். விவசாயத் தொழில் செழித்திட சரியான போக்குவரத்து திட்டங்களும், விளைபொருட்களை சேமித்துப் பாதுகாத்திடத் தேவையான குளிர் சாதனக் கிடங்குகள் போன்றவையும் அமைக்கப்படும்.
6. சூழலியல் சுகாதாரம்
மாறிவரும் சூழலியலுக்கு ஏற்ற வகையில் சூழலியல் சுகாதார மேம்பாடு என்பது எங்கள் அரசின் முழு முதற் கொள்கைகளில் ஒன்றாக அமையும். அதற்கான அனைத்து வழி முறைகளும் ஆராயப்பட்டு சாத்தியமானவைகள் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
7. செழுமைக் கோடு
வறுமைக்கோடு என்கின்ற பழைய அளவீடு மாற்றப்பட்டு செழுமைக்கோடு என்கின்ற புதிய அளவீடு அமையப் பெறும்.
செஞ்சியில் தடை- ஊழலுக்கு எதிராக மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? கமல்ஹாசன் காட்டம்
வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களை செழுமைக்கோட்டிற்கு கொண்டு வரும் முதல் அரசாக எங்கள் அரசு செயல்படும். ஒவ்வொரு குடிமகனின் அறிவும், திறனும் சரிவர வெளிக் கொண்டு வரப்பட்டு அதற்கு ஏற்ற வகையிலான திட்டங்கள் அமைக்கப்படும்.