மைத்துனரை கொடூரமாக கொன்ற சித்ரா.. 2வருசம் கழித்து செல்போனுக்கு 'அந்த' மெசேஜ்..மிரண்டுபோன காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: சொத்துக்காக மைத்துனரை கொடூரமாக கொலை செய்த அண்ணி, செல்போனுக்கு வந்த குறுந்தகவலால், 2 ஆண்டுகளுக்கு பின் கூலிப்படையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்
காஞ்சிபுரம், ஜெம் நகரில் வசித்து வந்தவர் கொஞ்சி அடைக்கான் (40). இவரது மனைவி பழனியம்மாள் (34). இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னையன்பட்டியை சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 2019 ஆகஸ்ட் 3ம் தேதி வேலைக்கு போன கொஞ்சி அடைக்கான், மாலையில் வீடு திரும்பவில்லை. இதுபற்றி பழனியம்மாள், காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்திவு செய்து அப்போது விசாரித்தனர். ஆனால் மேற்கொண்டு எந்த தகவலும் இல்லாத நிலையில் வழக்கு 2 ஆண்டுகளாக, கிடப்பில் போடப்பட்டது.

தனிப்படை போலீஸ்
அண்மையில் கொஞ்சி அடைக்கானின் மனைவி பழனியம்மாள், தனது கணவரின் சிம்கார்டை, செல்போனில் போட்டுள்ளார். அப்போது, புதுக்கோட்டை வங்கியில் கொஞ்சி அடைக்கான் கணக்கில் இருந்து ரூ.3.5 லட்சம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்திருக்கிறது. இதை கண்ட பழனியம்மாள், வடக்கு மண்டல ஐ.ஜி., சங்கரை சந்தித்து புகார் கொடுத்தார். அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்தது.

கார் வாங்கி கொடுத்தார்
அதன் பின்னர் விசாரணை சூடுபிடித்தது. கொஞ்சி அடைக்கான். கடந்த 2009ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். ஸ்ரீபெரும்புதூர் சுபத்ரா நகரில், கடந்த 2007ம் ஆண்டு வீடு கட்டி உள்ளார்.. பின்னர் அவர், தனது பெரியம்மா மகனையும், அவரது மனைவி சித்ரா, மற்றும் 2 மகள்கள், ஒரு மகனை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது, அண்ணனுக்கு வேலை இல்லாததால் ₹3 லட்சம் கொடுத்து, கார் வாங்கி கொடுத்துள்ளார்.

விலகிய கணவர்
அப்போது , கொஞ்சி அடைக்கானுக்கும், அவரது அண்ணி சித்ராவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது இதையறிந்த சித்ராவின் கணவன், கடந்த 2010ம் ஆண்டு சொந்த ஊரான பொன்னையன்பட்டிக்கு சென்றுவிட்டார். பின்னர் சித்ரா, கொஞ்சி அடைக்கானுடனே வசித்து வந்திருக்கிறார்.

தகராறு செய்த சித்ரா
இதனிடையே கடந்த 2015ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனியம்மாளை, கொஞ்சி அடைக்கான் திருமணம் செய்திருக்கிறார். திருமணம் முடிந்து இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது சித்ராவுக்கும் கொஞ்சி அடைக்கானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்துவிட்டு, இப்போது வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டில் தங்க கூடாது என தகராறு செய்திருக்கிறார்.

சித்ரா முட்டுக்கட்டை
இதனால் கொஞ்சி அடைக்கான், மனைவி பழனியம்மாளுடன் காஞ்சிபுரம் அடுத்த ஜெம் நகரில் வீடு வாடகை எடுத்து வசித்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தவேளையில் சுபத்திரா நகரில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்ய கொஞ்சி அடைக்கான் முயற்சி செய்து வந்தார். அதற்கு சித்ரா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.

கொலை செய்ய முடிவு
ஆனாலும், கொஞ்சி அடைக்கான் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தனது வீட்டை விற்பனை செய்ய ரூ.5 லட்சம் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார். இதையறிந்த சித்ரா, கொஞ்சி அடைக்கானை கொலை செய்துவிட்டால் இந்த வீடு நமக்கு சொந்தமாகிவிடும் என முடிவு செய்தார். அதற்கான திட்டம் தீட்டினார். அதன்படி, தனது மகளின் காதலன் ஏழுமலையை உதவுமாறு கூறியிருக்கிறார்.

பயங்கர ஸ்கெட்ச்
பின்னர் ஏழுமலை, சித்ராவின் மகன் ரஞ்சித்குமார் ஆகியோர், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த போலீஸ் எஸ்ஐ மகன் டார்ஜனிடம் சென்றனர். பின்னர் படப்பையை சேர்ந்த விவேகானந்தன் என்ற கூலிப்படை தலைவனை வைத்து கடந்த 2019ம் ஆண்டு கொஞ்சி அடைக்கானை கடத்தி கை, கால்களை கட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்து, இரும்பு பேரலில் அடைத்து, பின்னர் சிமென்ட் கலவையால் பேரல் முழுவதும் பூசி வேனில் ஏற்றி கொண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே மலைப்பட்டு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத விவசாய கிணற்றில் இரும்பு பேரலை வீசி சென்றனர் என தெரிந்தது.

8 பேருக்கு வலை
இதையடுத்து போலீசார், சித்ரா, அவரது மகன் ரஞ்சித்குமார், மகளின் காதலன் ஏழுமலை, போலீஸ் எஸ்ஐ மகன் டார்ஜன், படப்பையை சேர்ந்த கூலிப்படை தலைவர் விவேகானந்தன் ஆகியோரை கைது செய்தார்கள். இதைதொடர்ந்து, மலைப்பட்டு பகுதியில் உள்ள கிணற்றின் தண்ணீரை இரைத்து சடலத்தை மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திலேயே செங்கல்பட்டு அரசு டாக்டர் கார்திகேயன் பிரேத பதிசோதனை செய்தார். இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்காக எலும்பு கூடுகளை சேகரித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான சித்ராவின் வழக்கறிஞர், அவரது கள்ளக்காதலன் உட்பட 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications