”போராடிய மக்கள் வெளியேற்றம்” ஏரியை ஆக்கிரமித்து கட்டிய 86 வீடுகள் இடிப்பு.. காஞ்சியில் பரபரப்பு!
காஞ்சிபுரம்: பொன்னேரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 86 வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெரு அருகே ஏரிக் கரையோரம் பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நீர்வளத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர்.
அப்போது இவர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடந்து, இங்கு வீடுகள் கட்டப்பட்டதால் நீர்நிலைக்கு என்ன பாதிப்பு என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு! பொதுமக்கள் தவிப்பு! ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்குமா?
பேருந்துகளில் ஏற்றப்பட்ட மக்கள்
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை வலுக்கட்டாயமாக போலீசார் மூன்று பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த பொருட்கள் வருவாய் துறையினர் உதவியுடன் எடுத்து வெளியில் வைக்கப்பட்டன. இந்தப் பொருட்களை பொதுமக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
86 வீடுகள் இடிப்பு
இதனைத்தொடர்ந்து அங்கிருந்த வீடுகள் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் இடிக்கப்பட்டன. மொத்தம் 86 வீடுகள் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஏனாத்தூர் பகுதியில் மாற்று இடம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களை இந்தப் பகுதியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.
போலீசார் குவிப்பு
இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்தில் வீடுகள் கட்டும் வரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து வீடுகள் இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். அந்த வீடுகள் இடிக்கப்படும் இடத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த வழியாக யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
பொதுமக்கள் கேள்வி
வீடுகள் இடிக்கப்படுவது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல அரசு அலுவலகங்கள், அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்டவை நீர் நிலையை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளன. ஆனால் ஏழை மக்களின் குடியிருப்புகளை மட்டும் நீர் நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றுகின்றனர்" என்று குற்றம்சாட்டினர். தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணிகளுக்கு எதிராக பொதுமக்கள் அதிகளவில் கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.