உணவு இல்லை அடிப்படை வசதி எதுவுமில்லை... புறக்கணித்த அலுவலர்கள் - வாக்கும் எண்ணும் பணி தாமதம்
வாக்கு எண்ணும் பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தி தராததை கண்டித்து வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்: ஊராக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 74 மையங்களில் நடைபெறுகிறது. அச்சிறுப்பாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட சில மையங்களில் அலுவலர்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தி தராததை கண்டித்து வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாக்கும் எண்ணும் பணி தாமதமாகியுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ந் தேதி என இரு கட்டங்களாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 6ஆம் தேதியன்றும், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 9ஆம் தேதியன்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
முதற்கட்ட தேர்தலில் 6 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 30 நபர்களும், 61 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 228 நபர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 34 நபர்களும், 37 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 156 நபர்களும் போட்டியிட்டனர்.
அதற்கென மாவட்டத்திலுள்ள ஐந்து ஒன்றியங்களில் 1781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவானது நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 308 ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 69 ஆயிரத்து 224 பெண் வாக்காளர்களும் 18 பேர் என மொத்தம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 530 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உத்திரமேரூர் அருகே திருப்புலிவனத்திலுள்ள புரட்சிதலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சிக்கராயபுரம் ஸ்ரீ முத்துகுமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் காஞ்சிபுரம், வாலாஜாபாத்,உத்திரமேரூர்,ஸ்ரீபெரும்புதூர் ஆகியவைகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையம் எல்லையிலும் குன்றத்தூர் வாக்கு எண்ணிக்கை மையம் சென்னை பெருநகர காவல் நிலையம் எல்லையில் உள்ளது.
இன்று காலை 8 முதல் மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் 302 டேபிள்களில் 1208 பேர் வாக்கு பிரித்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதேபோல் 5 ஒன்றியங்களிலும் 569 டேபிள்களில் 3281 அரசுப் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு பிரித்தல், வாக்கு எண்ணுதல் எந்த பதவி என்பதை அறிந்துகொள்ள வாக்கு எண்ணிக்கை மையம் நுழைவுவாயில், வாக்கு எண்ணிக்கை அறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் டிஜிட்டல் பேனர்கள் மூலம் பார்வை வடிவில் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் , மாவட்ட ஆட்சியர் , மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டார பார்வையாளர் உள்ளிட்டோர் மட்டும் கைபேசி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகவர்கள் வேட்பாளர்கள் யாரும் கைப்பேசிகளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வர வேண்டாம் எனவும் மீறும் பட்சத்தில் நுழைவு வாயிலில் பறிமுதல் செய்யப்பட்டு மாலை திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணி தாமதம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த முடிந்த 8 ஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் அச்சிறுப்பாக்கம் அரசினர் பெண்கள் பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு இன்று காலை 6 மணிக்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.
இவர்களுக்கு இதுவரையில் இரண்டு மணி நேரங்கள் ஆகியும் உணவு தண்ணீர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை இதன் காரணமாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது வாக்கு எண்ணிக்கை துவங்கி உள்ளதால் அனைவரும் பசியோடு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வாக்கு எண்ணிக்கையை துவங்கியுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதவர்கள் மீது மாவட்ட தேர்தல் அலுவலர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 5 வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்று காலை 8 மணி முதல் துவங்கியது. முதற்கட்டமாக அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி சிக்கராயபுரம் பகுதியில் உள்ள முத்துக்குமரன் கல்லூரியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தி தராததை கண்டித்து வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்தனர்.
இதே போல குன்றத்தூர், மரக்காணம், காட்பாடி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாததாகவும், சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கடியாக நிற்க வேண்டி உள்ளதாகவும் முகவர்கள் புகார் அளித்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டையில் காலை உணவு வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணும் பணியை அலுவலகர்கள் புறக்கணித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் துவங்க உள்ள இருந்த நிலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு காலை உணவு வழங்காததால் வாக்கு எண்ணும் பணியில் இருந்து வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார்கள் இதனால் வாக்கு எண்ணும் பணி தாமதம் ஆக உள்ள நிலையில் அதிகாரிகள் உணவு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க 3 ஏ.டி.எஸ்பி, 4 டி.எஸ்.பி, 16 காவல் ஆய்வாளர்கள் , 600 காவலர்கள் என 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.