ஒரகடம் டாஸ்மாக்கில் துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்.. தீவிரமாக தேடும் போலீஸ்.. வழக்கில் புதிய திருப்பம்
காஞ்சிபுரம் : அக்டோபர் 4 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையில் கடை ஊழியரை கொன்றுவிட்டு இன்னொரு ஊழியரை துப்பாக்கியால் சுட்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் இருங்காட்டுக்கோட்டையில் வழிபறி செய்த கும்பலில் ஒருவனை போலீசார் என் கவுண்டர் செய்தனர். முதலில் இந்த கும்பலுக்கும், டாஸ்மாக்கில் நடந்த கொலைவெறி தாக்குதலுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று போலீசார் நினைத்தனர்.
ஆனால் இரண்டு இடங்களிலும் வெவ்வேறான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் கொள்ளை முயற்சி சம்பவத்தில் வேறு கும்பல் ஈடுபட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அந்த கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
'ஷாக்'..காஞ்சிபுரத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்..உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டெடுப்பு
டாஸ்மாக்
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகின்றது. இதன் மேற்பார்வையாளராக ஆறுமுகம் என்பவரும் விற்பனையாளர்களாக வாரணவாசி பகுதியை சேர்ந்த துளசிதாஸ் வயது 43 , கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த ராமு (வயது 34)என்பவரும் பணிபுரிந்து வந்தனர்.
துப்பாக்கிச்சூடு
எப்போதும் போல் அக்டோபர் 4 ஆம் தேதி இரவு விற்பனை நேரம் முடிந்தவுடன் கடையை பூட்டி விட்டு விற்பனையாளர்கள் துளசிதாஸ் மற்றும் ராம் ஆகிய இருவரும் கடையின் பின்புறம் உள்ள மதுபானக் கூடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியை எடுப்பதற்காக வந்துபோது அங்கு மறைந்திருந்த சில மர்ம நபர்கள் துளசிதாஸை கத்தியால் கடுமையாக தாக்கினர். இதை தடுக்க வந்த மற்றொரு விற்பனையாளர் ராமுவையும் கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் தப்பி உள்ளனர். மார்பருகே கத்தியால் குத்தப்பட்ட துளசிதாஸ் மிகுதியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
தனிப்படைஅமைப்பு
டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி கொள்ளை அடிக்கும் முயற்சியாக இந்த படுகொலை சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து
தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் படுகாயத்துடன் போராடிக்கொண்டிருந்த ராமை மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த துளசிதாசன் சடலத்தை மீட்டு உடற்கூறுபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு திருப்பெரும்புதூர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்தார். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடும் பணி நடந்து வந்தது.
மார்பில் குண்டு
இந்நிலையில் இருங்காட்டுக்கோட்டையில் வழிபறி செய்த கும்பலில் ஒருவனை போலீசார் என்கவுண்டர் செய்தனர். முதலில் இந்த கும்பலுக்கும், டாஸ்மாக்கில் நடந்த கொலைவெறி தாக்குதலுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று போலீசார் நினைத்தனர். ஆனால் காயம் அடைந்த டாஸ்மாக் ஊழியர் ராம் உடலில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் மார்பில் இருந்து துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது.
தீவிரம் காட்டும் போலீஸ்
இந்நிலையில் எண்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கியின் குண்டு இது இல்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதாவதுர் இரண்டு சம்பவங்களிலும் வெவ்வேறு வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து ஒரடகம் டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி செய்த அந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.