"பில்லி சூனியம்தான் அதுக்கு காரணம்” - கூலிப்படையை ஏவி அண்ணி குடும்பத்தை தீர்த்துக்கட்டிய இளைஞர்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே கணவன் மனைவி கொலை செய்யப்பட்டு ஏரி வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது அண்ணன் மனநலம் பாதிக்கப்பட்டதற்கு, அண்ணியின் குடும்பத்தினர் பில்லி சூனியம் வைத்ததே காரணம் எனக் கருதி அவர்களது குடும்பத்தை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணியின் குடும்பத்தினரை கொல்ல கூலிப்படை ஏவிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டைக்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம், அரசன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நெசவு தொழிலாளர்களான மாணிக்கம் (51), அவர் மனைவி ராணி (47), ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரி வாய்க்காலில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர். அரக்கோணம் தாலுகா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கந்து வட்டி கும்பலிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராததால், கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

கூலிப்படை
அரக்கோணம் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை நடந்த பகுதியிலுள்ள செல்போன் டவர் சிக்னல் மூலம் ஆய்வு செய்ததில், சம்பவம் நடந்த போது மூன்று பேர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில், மாணிக்கத்தின் மருமகன் சாய்ராமின் தம்பி தரணி என்பவர் கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

மருமகன்
விசாரணையில், மாணிக்கம், ராணி தம்பதியினரின் பட்டு நெசவு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணிக்கத்தின் மகள் சசிகலாவின் கணவரான திருத்தணியைச் சேர்ந்த சாய்ராம் 2 லட்சம் ரூபாயை கந்து வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார். அசலையும், வட்டி பணத்தையும் மாணிக்கம் செலுத்தவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் சாய்ராமுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் மனைவியின் குடும்பத்தாரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சாய்ராம் மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

பில்லி சூனியம்
இதையடுத்து சாய்ராம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் மன நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. மந்திரவாதி ஒருவர் மூலம் மாணிக்கம் குடும்பத்தினர் பில்லி சூனியம் வைத்ததால்தான் சாய்ராம் மன நலம் பாதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆத்திரமடைந்த சாய்ராமின் தம்பி தரணி என்பவர் கூலிப்படையை ஏவி மாணிக்கம், ராணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

மூவர் கைது
இதற்காக திருவள்ளூரை சேர்ந்த கூலிப்படை கும்பலிடம் 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி முன்பணமாக 4 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். கூலிப்படையினர் மாணிக்கம், ராணியிடம் உங்களுக்கு கடன் பிரச்சனையை தீர்க்க குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருகிறோம் என கூறி கடந்த 22ஆம் தேதி சோளிங்கர் அழைத்து வந்துள்ளனர். அங்கிருந்து 23ஆம் தேதி இரவு அவர்களை கடத்திச் சென்ற கூலிப்படையினர் காருக்குள் வைத்து கட்டையால் அடித்து கொலை செய்து கைலாசபுரத்தில் உடல்களை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து திருத்தணியை சேர்ந்த தரணி,, கூலிப்படையை சேர்ந்த திருவள்ளூர் சுனில்குமார், சந்திரன்,=ஆகியோரை அரக்கோணம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications