அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் இழுக்க கூடாது.. போராட்டம் நடத்திய பாஜக.. பரபரப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் யானை வரவில்லை என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி: குமாரகோயில் வைகாசி தேர்திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் இழுக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பாஜக மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் யானை வரவில்லை என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழா நாளை 12ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினசரியும் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடந்துவருகிறது. 9ஆம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

யானை
பாரம்பரியமாக யானை கொண்டு வந்து தேரில் போடுகின்ற தடியை எடுத்து ரதவீதிகளில் போடுவது வழக்கம். இந்த ஆண்டு தடியை யானை கொண்டு வரவில்லை. அதுமட்டுமல்லாமல் பத்து நாட்களுக்கு யானை மேல் கும்பம் வைத்து கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வது இயல்பு. இந்த முறை ஒருநாள் கூட யானை வரவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

அமைச்சர்களிடம் வாக்குவாதம்
மீன் வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வரும் வருடங்களில் யானையை வர வைப்பதாக அமைச்சர்கள் மனோ தங்கராஜ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்ததையடுத்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

தேர் இழுக்க எதிர்ப்பு
இதனையடுத்து குமரகோவில் முருகன் கோவிலில் கடந்த வாரம் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இன்றைய தினம் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்ட விழாவில் மனோ தங்கராஜ் பங்கேற்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு
இன்றைய தினம் தேரோட்டம் காலையில் தொடங்கியது. பாஜக எம்எல்ஏ காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்து அமைப்பினரும் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் வரவே பாஜகவினரும் இந்து அமைப்பினரும் அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்க கூடாது என்றும் தெரிவித்தனர்.

போராடியவர்கள் கைது
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். குமரகோவில் தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் விநாயகர் தேரினை வடம் பிடித்து இழுத்தார். தேரோட்டத்தில் அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications