திமுக கூட்டணிக்கு வாக்களிக்க கூறி தேவாலயங்களில் நோட்டீஸ்.. குமரி ஆயர் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்
குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நோட்டீஸ் தயார் செய்து தேவாலயங்களில் வினியோகம் செய்ய திட்டமிட்டு இருப்பதை அறிந்த பங்கு மக்கள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. திமுக, அதிமுக - பாஜக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். திட்டங்கள், வாக்குறுதிகளை வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து தெரியப்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் தேர்தல் விதிகள் மீறப்பட்டு வருவதாக புகார்களும் வருகின்றன.

தேவாலயங்களில் நோட்டீஸ்
'சமயச் சார்பின்மை அரசியல் காப்போம்' என்ற தலைப்பில் கன்னியாகுமாரி மாவட்டம் ரோமன் கத்தோலிக்க சபையின் குழித்துறை மறை மாவட்டம் சார்பில் ஒரு துண்டுப் பிரசுரம் தயார் செய்யப்பட்டு நாளை (அதாவது நேற்று) காலை தேவாலயங்களில் திருப்பலி முடிந்ததும் இதனை விநியோகிக்கத் திட்டமிட்டனர். அதற்காக நேற்று அனைத்துக் தேவாலயங்களிலும் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நோட்டீஸில் குறிப்பாக, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும், மற்ற கட்சிகள் அனைத்தும் மதவாதக் கட்சிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் செயலாகும் என பங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைப் பிரசுரித்தது 'தமிழக ஆயர் பேரவை தமிழ்நாடு' மற்றும் 'கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் தமிழ்நாடு' ஆகிய அமைப்புகள் ஆகும்.
ஆயர் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்
இதில் கிறிஸ்தவ வசனங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிராக ஒரு விரோதப் போக்கு உருவாக்கப்படுகிறது என கூறி இது குறித்து ஒரு புகார் மனு எழுதி, இதனைத் தடுக்கக் கோரி நேற்று மாலை பல்வேறு தேவாலயங்களை சார்ந்த பங்கு மக்கள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஆயர் இல்லத்தில் மறைமாவட்ட ஆயரை பார்த்து புகார் மனு அளிக்க வந்தனர். அங்கு செயலாளரைச் சந்தித்து விஷயத்தைக் கூறிய நிலையில் புகார் அளிக்க வந்த மக்களை, நேரமில்லை என்று கூறி ஆயர் சந்திக்க மறுத்தார்.
இதனை தொடர்ந்து புகார் அளிக்க வந்த பங்கு மக்கள் ஆயர் இல்லத்தின் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸைச் சந்திக்க அனுமதி கேட்டோம், ஆனால் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கூறுகையில் "ஒவ்வொரு தேர்தலிலும் ஆயர்கள் மூலமாக இது போன்ற நோட்டீஸ்களைக் கொடுத்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்வது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..
தேர்தல் விதி மீறல்
இது போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்கள் நடக்கக்கூடாது என்பதால், ஆதாரத்துடன் நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்கள் தேவாலயத்திலிருந்தே இந்த நோட்டீஸை எடுத்து வந்திருக்கிறோம். சமூக ஊடகங்களிலும் இது ஏற்கனவே பகிரப்பட்டுவிட்டது. செட்டிச்சாவளை, வியன்னூர், மொளகுவிளை, சாய்க்கோடு, திற்பரப்பு , சாணார்விளை, முட்டக்காடு மற்றும் குலசேகரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமான பல்வேறு தேவாலயங்களில் இந்த பிரசுரம் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதால் தேர்தல் விதி மீறல் செயலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இதில் எந்த அரசியல் கட்சி பாகுபாடும் இல்லை, அனைத்துக் கட்சியினரும் பங்கு மக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இணைந்து வந்துள்ளோம். இது ஒரு மதக் கலவரத்தைத் தூண்டும் செயலாக இருப்பதால், இதனைத் தடுக்க ஆயரைச் சந்திக்க மனு கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறோம்" என்று கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.














Click it and Unblock the Notifications