காங்கிரஸ் VS திமுக.. இடைத்தேர்தலில் விளவங்கோடு தொகுதி யாருக்கு? முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார். மேலும் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறதா? இல்லாவிட்டால் திமுக களமிறங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவுவை எடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி. இவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி ஆவார். விஜயதாரணியின் குடும்பம் பாரம்பரியான காங்கிரஸ் கட்சியின் குடும்பமாகும்.

விஜயதாரணி கடந்த 2011ல் முதல் முறையாக விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது 3வது முறையாக அவர் விளவங்கோடு எம்எல்ஏவாக பொறுப்பு வகித்து வந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக்கூறி அவர் பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனால் வரும் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
இதில் பாஜக சார்பில் விஜயதாரணி வேட்பாளராக களமிறங்கலாம் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் விளவங்கோடு சட்டசபை தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா? இல்லாவிட்டால் திமுக நேரடியாக களமிறங்க உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த டிஆர் பாலு எம்பி, அமைச்சர் கேஎன் நேரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதி பற்றி விவாதிக்கப்பட்டது. அதேபோல் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விளவங்கோடு சட்டசபை தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தான் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளது. முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா காலமானார். இதையடுத்து அங்கு நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே சீட் வழங்கப்பட்டது. திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் தான் விளவங்கோடு சட்டசபை தொகுதியையும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications